தோல்வி என்றால் விஜய் தூங்கமாட்டார்.. விதி விளையாடியது.. புலி பற்றி தயாரிப்பாளர் எமோஷனல் டாக்
சென்னை: விஜய் இப்போது GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படமானது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்கலாம் என்றும்; அதுதான் கடைசி படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பிறகு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருக்கிறார் விஜய். இந்தச் சூழலில் விஜய் பற்றி தயாரிப்பாளரும், அவரது பிஆர் ஓவுமான பி.டி.செல்வக்குமார் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார்.
விஜய் இதுவரை 68 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் சரி பாதி வெற்றி, சரி பாதி தோல்வியை சந்தித்தவை. முக்கியமாக அவரது தோல்வி படங்களில் புலி மரண அடி வாங்கியது. சிம்புதேவன் இயக்கியிருந்த அந்தப் படம் ஃபேண்டஸி ஜானரில் உருவாகியிருந்தது. ஆனால் படம் பெரிதாக எடுபடவில்லை. முக்கியமாக பலரும் அந்தப் படத்தை ட்ரோல் மெட்டீரியலாகவே மாற்றினார்கள். அந்தப் படத்தை தயாரித்தது விஜய்யின் பிஆர்ஓவாக இருந்த பி.டி.செல்வக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வக்குமார் பேட்டி: இந்நிலையில் புலி படத்தின் தோல்வி குறித்தும், விஜய் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் செல்வக்குமார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், "மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கான படத்தை கொடுக்க வேண்டும் என விஜய்க்கும், அவரது தந்தை எஸ்.ஏ.சிக்கும் குறிக்கோளாக இருந்தது. அதனால்தான் ஒரு சில படங்களை பிற மொழிகளில் இருந்து தேர்ந்தெடுத்து ரீமேக் செய்தார்கள். ஒரு படம் தோல்வியடைந்துவிட்டால் அடுத்த படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என நினைத்து விஜய் உழைப்பார். அதுவரை அவருக்கு தூக்கம் வராது.
எல்லோருக்கும் சறுக்கல்: ஒருகட்டத்தில் எல்லோருக்கும் சறுக்கல் வரும். புலி படத்தை தயாரிக்கும்படி விஜய் என்னிடம் சொன்னார். ஒரு ஹீரோவாக பிஆர்ஓவுக்கு அவர்தான் படத்தை முதன்முறையாக கொடுத்தார். இது சிலருக்கு பிடிக்கவில்லை. பொறாமை இருக்கத்தான் செய்தது. புலி படத்துக்கு நன்றாகவே பப்ளிசிட்டி செய்திருந்தோம். அவருடைய மார்க்கெட்டுக்கான வியாபாரமும் ஆகியிருந்தது.
வருமான வரித்துறை சோதனை: ஆனால் வருமான வரித்துறை சோதனை என்றவுடன் அதை பெரிதாக பேசினார்கள். அதனை விஜய்யோ, நானோ பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. விநியோகஸ்தராக எல்லா ஏரியாவிலும் எனக்கு நல்ல அனுபவம் இருந்தது. ஆனால் விதி வேறு மாதிரி விளையாடியது. அந்த நேரத்திலா சிம்புதேவன் ஒரு சொதப்பல் படத்தை எடுக்க வேண்டும். என்ன செலவு வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லியும் பயனில்லை.
ரிலீஸுக்கு முன்பே தெரிந்துவிட்டது: படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பு பார்த்த அவுட் புட்டிலேயே படத்தின் ரிசல்ட் தெரிந்துவிட்டது. அவ்வளவு பெரிய வியாபாரம். யாரிடம் போய் என்ன சொல்ல முடியும். இரவெல்லாம் தூக்கமே இல்லை. நான் ஏதோ தப்பு பண்ணிவிட்டேன் என்று மனைவியிடம் புலம்பினேன். இந்த மாதிரியான கசப்பான அனுபவங்கள் சினிமாவிலிருந்து தள்ளியிருக்க வைத்துவிட்டது. கஷ்டப்பட்டு வந்த எனக்கு அதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. வருமான வரித்துறை வந்ததுகூட பிரச்னையில்லை. ஆனால் படத்தை சரியாக எடுக்க முடியவில்லையே என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை” என்றார்.


Click it and Unblock the Notifications











