“முருக கடவுளை கொச்சைப்படுத்தவில்லை“… வருத்தம் தெரிவித்த தயாரிப்பாளர் ராஜன் !
சென்னை : அறிமுக இயக்குநர் சாய்மோரான் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் முகமறியான், இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டுவிழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில், கே ராஜா, தமிழ் கடவுள் முருகனை கொச்சைப்படுத்தி பேசிவிட்டதாக கூறி மதுரை ஆதீனம் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள கே ராஜா, முருகக் கடவுளை அவதூறாக நான் எதுவும் பேசவில்லை, அதற்காக நீங்கள் கடினமான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கக்கூடாது என கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் கே ராஜன்
முகமறியான் விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன், அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம். தாயையும், தந்தையையும் வணங்குபவன் வேறு கடவுளை வணங்க வேண்டாம், கடவுள் இல்லை. அம்மா, அப்பா தவிர வேறு யாருமில்லை என்றார். கடவுளை வைத்து ஒரு புராணக்கதை உண்டு என்றார்.

ஞானப்பழம்
ஞானப்பழத்தை பார்வதியிடம் நாரதர் கொடுக்க, முருகரும், விநாயகரும் எனக்கு உனக்கு என்று சண்டை போட, பார்வதி யார் முதலில் உலகை சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத்தான் ஞானப்பழம் என்கிறார். உடனே மயிலை எடுத்துக்கொண்டு உலக சுற்றிவர சென்றுவிடுகிறார் முருகர். விநாயகரோ தாய், தந்தை தான் உலகம் என்று அவர்களை சுற்றி ஞானப்பழத்தை வாங்கிவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் கோவிச்சுகிட்டு பழநில போய் உட்காந்துட்டு இன்னிக்கு வரையும் இறங்க மாட்டீங்குது என்று பேசி இருந்தார்.

முருகனை திட்டினால் அழகு போய் விடும்
கே ராஜன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த, மதுரை ஆதீனம், முருகன் என்றால் அழகு என்று அர்த்தம். முருகனை திட்டினால் அழகு போய் விடும். சினிமாக்காரர்களுக்கு எதுவும் தெரியாது. முருகனை விமர்சிப்பவர்கள் அதன் பலனை அனுபவிப்பவர்கள். கடவுளை கொச்சைப்படுத்துபவர்களின் படங்களை யாரும் பார்க்கக் கூடாது, படத்தை ஓட விடக் கூடாது. முருகன் தமிழ் கடவுள், முருக பக்தர்கள் அவரை தண்டிக்க வேண்டும் கே ராஜன் பேசியது கண்டனத்துக்குரியது. கடவுள்களை விமர்சிக்க கூடாது என பேசி இருந்தார்.

கே ராஜன் விளக்கம்
ஆதீனம் பேசியதற்கு விளக்கம் அளித்துள்ள தயாரிப்பாளர் கே ராஜன், அருள்மிகு மதுரை ஆதீனம் அவர்களுக்கு, தமிழ் திரைப்பட பாதுகாப்பு குழு தலைவர் நடிகர் கே ராஜன் வணக்கத்துடன் தெரிவிப்பது, தமிழ் கடவுள் முருகப் பெருமானை திட்டியவர்களுக்கு அழகு போய்விடும், சினிமாக்காரர்களுக்கு எதுவும் தெரியாது எனக் கூறி தாங்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறீர்கள்.

கடினமான வார்த்தைகள் தேவையில்லை
அனைத்தும் அறிந்த நீங்கள் மேற்கொண்ட கடினமான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கக்கூடாது என கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் எந்த இடத்திலும் முருகக் கடவுளை திட்டுகிற அளவிற்கு கடினமான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் முன்னோர்களின் வழிகாட்டுதல்படி வாழ்பவன் நான். பெற்ற தாய் தந்தை தான் முதல் தெய்வம் என்பதை முருகப்பெருமானே உணர்த்தி இருக்கிறார்.

நான் வருத்துகிறேன்
முகமறியான் எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது படத்தின் நாயகனும், இயக்குநரும் தன் தாயை மேடைக்கு அழைத்து சால்வை போர்த்தி காலில் விழுந்து வணங்கினார். அதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்து தாய், தந்தையரை வணங்கினால் எல்லா கடவுளையும் வணங்குவதற்குச் சமம் என்னும் கருத்தை கூறி அதற்காகவே விநாயகரையும் முருகனையும் பயன்படுத்தினேன். முருகனை தவறாக விமர்சிக்க எந்த நோக்கமும் இல்லை, தமிழ் கடவுள் முருகபக்தன் நான். என் பேச்சு உங்களையோ, முருக பக்தர்களையோ பாதித்திருந்தால் நான் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என தயாரிப்பாளர் கே ராஜன் அறிக்கை வெயிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











