அட, பத்திரிகையாளர்களுக்கும் பட வாய்ப்பு தரத் தயாரா இருக்காருப்பா ஒரு தயாரிப்பாளர்!!
பொதுவாக பத்திரிகையில் எழுதுகிறவர்கள் அல்லது பெரிய விமர்சகர்கள் ஒரு சினிமா இயக்குநராக ஜெயிப்பது இங்கு ரொம்ப கஷ்டம். ஓரிரு விதிவிலக்குகள் தவிர.
இணைய உலகில் வலைப்பூ ஆரம்பித்து சினிமா விமர்சனம் எழுதி வந்த கேபிள் சங்கர் என்பவர் இப்போது முதல் முறையாக ஒரு படத்தை இயக்குகிறார். படத்துக்கு தொட்டால் தொடரும் என தலைப்பிட்டுள்ளார்.

இந்தப் படத்தை எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் துவார் ஜி. சந்திரசேகர் தயாரித்துள்ளார். வீரசேகரன் படம் மூலம் அமலா பாலை தமிழ் திரையுலகுக்கு தந்த பெருமை இவருக்குத்தான் உண்டு.
தமன், அருந்ததி, வின்சென்ட் அசோகன்,ஹலோ எப்.எம். பாலாஜி, அம்மு, ரஞ்சன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு- விஜய் ஆம்ஸ்ட்ராங், இசை -பி.சி சிவன்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது.
"ஐடி.யில் எச்ஆராக இருக்கும் ஒருவனுக்கும் கால் சென்டரில் வேலை பார்க்கும் பெண்ணுக்கும் காதல், அதிலுள்ள பிரச்சினைகள்தான் கதை.
விமர்சகர்கள் படம் எடுத்து வெற்றி பெற முடியுமா ? என்ற கேள்வி உள்ளது.
"எல்லா நல்ல விமர்சகர்களுக்குள்ளும் நல்ல ரசிகன் இருக்கிறான். நான் பல படங்களை விமர்சனம் செய்து இருக்கிறேன். பாராட்டியும் இருக்கிறேன். நல்லதை விட்டு விட்டு கெட்டதை மட்டும் நினைவில் வைத்து இருக்கிறார்கள்.

நான் வெறும் விமர்சகன் என்று மட்டும் என்று சொல்லி விடவேண்டாம். நான் சினிமாவில் 15 ஆண்டுகள் இருக்கிறேன். நான் இதற்குத்தான் ஆசைப்பட்டேன். அனுபவமில்லாமல் இறங்கலாமா என்று என்னிடம் கேள்வி கேட்க முடியாது. எனக்கு எல்லா அனுபவங்களும் உண்டு.
எல்லாப் படங்களையும் விமர்சனம் செய்த என் படத்திற்கும் விமர்சனம் இருக்கும்.அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். பல விஷயங்கள் விமர்சிக்க முடியாதபடி என் படம் இருக்கும் என்று நம்புகிறேன்," என்றார்.
தயாரிப்பாளர் துவார் ஜி. சந்திரசேகர் பேசுகையில், "ஐந்து படங்கள் தயாரிக்கிறேன். தகுதியான திறமையுள்ள பத்திரிகையாளர்களுக்குப் படவாய்ப்பு தருவேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











