Amaran: அமரன் படக்குழுவை மனதார பாராட்டிய தாணு.. தம்பி சிவகார்த்திகேயன் நடிப்பு இருக்கே..!
சென்னை: வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் அமரன். இந்தப் படத்தில் முகுந்த வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவரது காதல் மனைவி இந்து ரெபேக்கா வர்ஹீஸாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்தினை சோனி பிக்சர்ஸ் உடன் நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. படம் பார்த்த பலரும் படத்தினைப் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவிம் மிகவும் முக்கியமான மற்றும் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ். தாணு படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார்.
ஏற்கனவே கூறியதைப்போல் இந்தப் படம் மறைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட படம். இதனால் இந்திய உள்துறை அமைச்சகத்திடம் படத்தின் மொத்த கதையையும் சமர்பித்து, அவர்களிடம் ஒப்புதல் பெற்று, காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத் தளவாடங்களில் முழுப் படப்பிடிப்பும் நடைபெற்றது. மேலும் படத்தினை சென்சாருக்கு அனுப்புவதற்கு முன்னரே, இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு திரையிடப்பட்டது என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

மேலும் படத்தினைப் பார்த்த இந்திய உள்துறை அமைச்சகம், ராணுவ வீரர்களுக்கு ஒரு சிறப்புக் காட்சி திரையிட படக்குழுவிடம் கேட்டுள்ளனர். அவர்களும் சரியெனச் சொல்ல, படம் பார்த்த ராணுவ வீரர்கள் படத்தை மட்டும் இல்லாமல் படக்குழுவினரையும் பாராட்டினர். குறிப்பாக சிவகார்த்திகேயனை, இந்திய ராணுவத்தில் சேர்ந்துகொள்ளவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
வசூல் : படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் படத்தினை அதிக தியேட்டர்களில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. தமிழ் திரையுலகில் இருந்து இம்முறை மொத்தம் மூன்று படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் சிவகார்த்திகேயனின் அமரனுக்குத்தான் அதிக தியேட்டர்கள் கிடைத்தது. குறிப்பாக படத்தினை தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 800 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டது. படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 42.3 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் : படத்தினைப் பார்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படக்குழுவினரைப் பாராட்டியது மட்டும் இல்லாமல், தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு போனில் வாழ்த்து தெரிவித்தார். குறிப்பாக, "க்ளைமேக்ஸ் காட்சி ரொம்பவும் சென்ட்டிமென்ட்டாக இருந்தது. கண்ணு கலங்கிடுச்சு" எனக் கூறினார். மேலும் படத்தினைப் பார்த்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் படக்குழுவினரைப் பாராட்டினர். படம் எட்டுத்திக்கும் பாராட்டு மழையில் நனைந்து கொண்டு இருக்கும்போது படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தும், படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தும் கடிதம் எழுதினார்.

தாணு : இப்படியான நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கக் கூடிய கலைப்புலி எஸ். தாணு தனது எக்ஸ் பக்கத்தில் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில், " கண்கள் பனித்தது! இதயம் கனத்தது! அமரன் படத்தில் ஒவ்வொரு frame'um செதுக்கியுள்ளர் இயக்குனர். முதல் தர இயக்குனர் வரிசையில் ராஜ்குமார் பெரியசாமி, உயரிய நடிப்பின் காந்தமாய் தம்பி சிவகார்த்திகேயன், மனதை விட்டு அகலா சாய் பல்லவி, நெஞ்சை நெகிழ வைக்கும் இசையில் ஜி.வி. பிரகாஷ்குமார், தரம், தகுதி, நிர்ணயம், தயாரிப்பில் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம். தமிழன் பெருமிதம் கொள்ளக்கூடிய உயரிய கலைப் படைப்பு" என பாராட்டியுள்ளார். இவரது பாராட்டு படக்குழுவினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











