Sam C.S: பணம் வாங்கிக் கொண்டு இசையமைக்கவில்லையா சாம் சி.எஸ்? தயாரிப்பாளர் என்ன இப்படி சொல்றாரு?
சென்னை: தமிழ் சினிமாவில் தனது அழுத்தம் திருத்தமான பின்னணி இசையால் பாராட்டுக்களை குவித்து வருபவர் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இவரது பாடல்கள் ஹிட் அடிக்கிறதோ இல்லையோ, பின்னணி இசை தரம் என்று சொல்லும் அளவுக்கு அமைத்துக் கொடுத்துவிடுவார். இன்னும் சொல்லப்போனால், அவரது பின்னணி இசை தான் அந்த படத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் என்று கூறும் அளவுக்கு அவரது பின்னணி இசை அமைந்துள்ளது. இந்நிலையில் இவர் மீது தயாரிப்பாளர் சமீர் அலிகான் மோசடி புகார் ஒன்றை சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் அளித்துள்ளார். இது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான தமிழ் படமான ஓர் இரவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பின்னர் 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் தான் இவர் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெற்றார். 2017 ஆம் ஆண்டு இவரது இசையில் வெளியான விக்ரம் வேதா படம் அவரது இசைக்கு என தனி அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது. அடுத்த ஆண்டே வெளியான கைதி படம் மேலும் புகழ் சேர்த்தது. இவரது பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தாலும், சாம் சி.எஸ் என்றாலே பின்னணி இசைதான் என்ற எண்ணம் திரைத்துறையில் ஏற்பட்டுவிட்டது.

பின்னணி இசை: இவர் தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என இந்தியா முழுவதும் ஒரு ரவுண்ட் வந்து கொண்டுதான் உள்ளார். கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 படத்திற்கு சாம் சி.எஸ் பின்னணி இசை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்ப்பதால், இயக்குநர் தரப்பில் இருந்தோ, அல்லது தயாரிப்பாளர் தரப்பில் இருந்தோ, படத்தின் பாடல்களுக்கு இசை அமைக்கும் இசையமைப்பாளர்களிடம், பின்னணி இசைக்கு சாம். சி.எஸ்-ஐ நியமித்துக் கொள்ளலாம் என்று பேசும் அளவிற்கு பின்னணி இசையில் வளர்ந்து வருகிறார்.
காவல் நிலையத்தில் புகார்: இந்நிலையில், தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ் மீது பண மோசடி புகார் அளித்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் சமீர் அலிகான் அளித்துள்ள புகாரில், " கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ் பையன் இந்தி பொண்ணு என்ற படத்திற்கு இசையமைக்க சாம் சி.எஸ்-ஐ ஒப்பந்தம் செய்தோம். அதற்காக அவருக்கு ரூபாய் 25 லட்சம் முன்பணம் ஆகவும் கொடுத்தோம்.

ஏமாற்றிவிட்டாரா?: சில பல காரணங்களால் படத்தை அப்போது தொடர்ந்து எடுக்க முடியவில்லை. தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த படத்திற்கு இசையமைத்து கொடுக்கச் சொல்லி அவரிடம் பலமுறை முறையிட்டும் அவர் இசை அமைத்துக் கொடுக்கவில்லை. இந்நிலையில் பணத்தை திருப்பிக் கேட்டால், பணத்தையும் திருப்பி தராமல் சாம் சி.எஸ் ஏமாற்றி வருகிறார்" என்று தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சமீர் அலிகானின் இந்த புகார் குறித்த தகவல்கள் தற்போது திரைத்துறை வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது. இணையத்திலும் சாம் சி.எஸ் மீதான புகார் குறித்த தகவல்கள் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











