‘வால்டர்’.. அப்பா சத்யராஜுக்கு ஒர்க் அவுட் ஆச்சு.. மகன் சிபிக்கு தலைவலியா மாறிடுச்சே!
தன்வசம் உள்ள 'வால்டர்' கதை மற்றும் தலைப்பை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:'வால்டர்' கதை மற்றும் தலைப்பை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிராஜ் படக்குழுவுக்கு தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அன்பரசன் இயக்கத்தில், சிபிராஜ், கௌதம் மேனன். சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கும் படம் வால்டர். இந்த படத்தை பிரபு திலக் என்பவர் தயாரிக்கிறார். வால்டர் படத்தின் படப்பிடிப்பு நேற்று தான் முறைப்படி தொடங்கியது.
"சூர்யாவைப் பார்த்து ஏங்கிவிடக் கூடாது".. மகளுக்காக நடிகர் விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு!

சிங்காரவேலன்:
இந்நிலையில் படம் குறித்த அறிவிப்பு வெளியான முதல் நாளே வால்டருக்கு பிரச்சினை எழுந்துள்ளது. அதாவது, வால்டர் படத்தின் தலைப்பும், கதையும் தனக்கு தான் சொந்தம் என தயாரிப்பாளர் சிங்காரவேலன் உரிமை கோரியுள்ளார்.

விக்ரம் பிரபு:
இதுகுறித்து அவர் கூறியதாவது, " என்னுடைய மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் ‘வால்டர்' என்கிற படத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். விக்ரம் பிரபு, அர்ஜுன் ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தை இயக்குனர் அன்பரசன் என்பவர் இயக்க உள்ளார்.

பட பூஜை:
இந்த நிலையில் பிரபு திலக் என்கிற தயாரிப்பாளர், இதே இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில், சிபிராஜ், கௌதம் மேனன். சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் இதே கதையை வால்டர் என்கிற தலைப்பிலேயே படமாக தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து இந்த படத்திற்கான பூஜையும் போடப்பட்டு அந்த புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும் வெளியாகியுள்ளன. .

சட்டப்படி நடவடிக்கை:
'வால்டர்' படத்தின் கதையும் படத்தின் தலைப்பும் என் வசமே இருக்கிறது. அப்படி இதே கதையை வேறு நடிகர்களை வைத்து எனது அனுமதி இல்லாமல் தயாரிக்க முற்பட்டால் சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது காப்பிரைட் சட்டத்தின் கீழ் நீதிமன்றம் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்", என தெரிவித்துள்ளார்.

வால்டர் வெற்றிவேல்:
கடந்த 1993ம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியாகி மாபெரும் சூப்பர்டூப்பர் ஹிட் ஆன படம் வால்டர் வெற்றிவேல். பி.வாசு இயக்கியிருந்த இப்படத்தில் நாயகியாக சுகன்யா நடித்திருந்தார். அப்பா சத்யராஜுக்கு மாபெரும் திருப்புமுனையைக் கொடுத்ததால், அதே தலைப்பில் தானும் நடிக்க முயற்சித்திருப்பார் போலும் சிபிராஜ். ஆனா, அது அவரை பிரச்சினையில் கொண்டு போய் விட்டு விட்டது.


Click it and Unblock the Notifications











