என்னது மணிரத்னத்தால் அஜித் அறிமுகமாகவிருந்தாரா?.. தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்
சென்னை: தமிழ் திரையுலகின் டாப் 5 நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ஆசை நாயகன், அல்டிமேட் ஸ்டார், தல என அழைக்கப்பட்டுவந்த அஜித் தற்போது ஏகே. சினிமா பின்னணி இல்லாமல் திரையுலகுக்குள் வந்து பல இடங்களில் அடிப்பட்டு தற்போது உயர்ந்த இடத்தை அவர் பிடித்திருக்கிறார். இப்போது அவர் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்துடைய முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்து அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில் அஜித் குறித்து தயாரிப்பாளர் சௌந்தர பாண்டியன் பேசியிருக்கிறார்.
சினிமா பின்னணி இருக்கும் குடும்பத்திலிருந்து ஒருவர் வந்து திரையுலகில் நிலைப்பதே கடினம். அப்படி பின்னணி இருந்தும் சினிமாவுக்குள் வந்து காணாமல் போன ஹீரோக்களை கோடம்பாக்கம் நிறையவே பார்த்திருக்கிறது. ஆனால் அஜித்தோ யாரின் தயவும் இல்லாமல் திரையுலகுக்குள் வந்து தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் அவருக்கென்ற ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவரது படம் வந்தால் திருவிழா போல் கொண்டாடிவருகிறார்கள்.

ஆசை நாயகன் அஜித்: திரையுலகுக்குள் வந்த புதிதில் அஜித்தை வழிநடத்த யாரும் இல்லை என்பதுதான் உண்மை. அவரே கதைகளை கேட்டு தேர்ந்தெடுத்து நடித்தார். அதில் சில படங்கள் வெற்றியடைந்தன பல படங்கள் தோல்வியடைந்தன. இந்தச் சூழலில் இயக்குநர் வசந்த்தின் இயக்கத்தில் அவர் நடித்த ஆசை படம் மெகா ஹிட்டானது. அதிலிருந்து அவர் ஆசை நாயகன் ஆனார். தொடர்ச்சியாக அவர் நடித்த காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற ஹிட்டடிக்க தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார் அஜித்.
அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார்: தொடர்ந்து படங்களில் நடித்துவந்த அஜித்துக்கு பக்கா கமர்ஷியல் ஹிட்டானது அவரது 25ஆவது படமான அமர்க்களம். இந்தப் படத்திலிருந்துதான் ஷாலினிக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. சரண் இயக்கிய அந்தப் படம் மெகா ஹிட்டாக அஜித் அல்டிமேட் ஸ்டார் ஆனார். இருப்பினும் கார் ரேஸ், பைக் ரேஸ் என அவரது கவனம் பல வழிகளில் போக மீண்டும் தோல்வி முகத்தை பார்த்தார்.
ஏகே : தொடர்ந்து தீனா, வரலாறு உள்ளிட்ட படங்கள் அவருக்கு தோல்வி படங்களாக அமைய மீண்டும் தோல்வியை சந்தித்தார். பிறகு மீண்டு வந்து பில்லா படத்தில் வெற்றி கண்டார். அதன் பிறகும் அசல், ஏகன் தோல்வி படங்களாக அமைய மங்காத்தா இண்டஸ்ட்ரி ஹிட்டானது. அவரது 50ஆவது படமான மங்காத்தாவிற்கு பிறகு அஜித்திற்கு பெரும்பாலும் ஹிட் படங்களே அமைந்தன. சமீபத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்த துணிவு படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார்.
தயாரிப்பாளர் கொடுத்த பேட்டி: இந்தச் சூழலில் தயாரிப்பாளர் சௌந்தர பாண்டியன் என்பவர் அஜித் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசுகையில், “அமராவதிக்கு முன்பே மணிரத்னம் தயாரிப்பில்தான் அஜித் நடிக்கவிருந்தார். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த ரமணாதான் அந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. அதனால் அந்தப் படத்துக்கான ஸ்டில்ஸ் எடுக்க அஜித்தை வரவழைத்து கேமரா மேன் ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்.
கேமரா மேன் மரணம்: அந்த சமயத்தில் ஃபோட்டோ எடுக்கும்போதே அந்த கேமரா மேனுக்கு வலிப்பு வந்து இறந்துவிட்டார். அதனால் அந்தப் புகைப்படம் எல்லாம் அமராவதி படத்துக்காக பயன்படுத்தப்பட்டன. இல்லையென்றால் அமராவதிக்கு முன்பே அஜித்தை மணிரத்னம்தான் அறிமுகப்படுத்தியிருப்பார்” என்றார்.


Click it and Unblock the Notifications











