Cinema Ticket Price Hike - சினிமா டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை.. எதிர்ப்பு தெரிவித்த தயாரிப்பாளர்
சென்னை: Cinema Ticket Price Hike (சினிமா டிக்கெட் விலை உயர்வு) சினிமா டிக்கெட்டுக்கான விலையை உயர்த்துவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் வைத்திருக்கும் கோரிக்கைக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
சினிமாதான் பலதரப்பட்ட மக்களின் பொழுதுபோக்காக இருந்துவருகிறது. ஏதேனும் ஒரு சோகம் வந்தால் திரையரங்குக்கு சென்று ஒரு படத்தை பார்த்தால் போதும் சோகம் எல்லாம் பறந்துவிடும் என்ற நினைப்பில் பலர் திரையரங்குகளுக்கு செல்லும் பழக்கம் இருக்கிறது. முன்பெல்லாம் சினிமா டிக்கெட்டின் விலை ஏழை, எளிய மக்களுக்கும் உகந்ததாக இருந்தது. காலம் போகப்போக டிக்கெட் விலையும் அதிகரிக்கத் தொடங்கியது.

120 ரூபாய் டிக்கெட்: இப்போது ஒரு சினிமா பார்க்க குடும்பத்தோடு செல்ல வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 1000 ரூபாய்வரை செலவாகிறது. 120 ரூபாய் டிக்கெட்டின் ஆரம்ப விலையாக இருக்கிறது. அதன்படி 120 ரூபாய் டிக்கெட்டுக்கு போக பார்க்கிங், தியேட்டரின் கேண்டீனில் விற்கும் காபி, பாப்கார்ன், குளிர் பானம் என அத்தனையின் விலையும் சராசரியான ஒரு நடுத்தர குடும்பத்தின் பட்ஜெட்டை ரொம்பவே அசைத்து பார்க்கிறது. இதன் காரணமாகவும் திரையரங்குக்கு வரும் கூட்டம் வெகுவாகவே குறைய ஆரம்பித்திருக்கிறது.
ஓடிடி: இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் ஓடிடியின் வருகையும் அதிகரித்துள்ளது. வாராவாரம் ஒரு குடும்பம் திரையரங்குக்கு சென்று சினிமா பார்க்க வேண்டுமென்றால் 1000 ரூபாய் வேண்டும் என்று இருக்கும் நிலையில் அந்த 1000 ரூபாய்க்கு ஓடிடியில் சந்தா கட்டிவிட்டால் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது வீட்டில் இருந்தபடியே பார்க்கலாம் என்ற மனப்பான்மையும் பெரும்பான்மையான மக்களிடம் வந்திருக்கிறது. எனவே திரையரங்குகளின் நிலைமை மோசமடைய தொடங்கியுள்ளது.
டிக்கெட் விலை அதிகரிப்பு: இப்படி திரையரங்குகள் தொடர்ந்து நிலைப்பதற்கு தடுமாறிக்கொண்டிருக்கும் சூழலில் தற்போது திரையரங்க உரிமையாளர் சங்கமே திரையரங்குகளுக்கு ஒரு ஆபத்தை விதைத்துள்ளது. அதாவது சினிமா டிக்கெட்டின் விலையை உயர்த்த வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது.
என்ன கோரிக்கை: அந்தக் கோரிக்கையில், "120 ரூபாயில் இருந்து விற்கப்பட்ட டிக்கெட் திரையரங்கை பொறுத்து அதிகபட்ச கட்டணத்திற்கு உயர்த்தப்பட வேண்டும். மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு ₹250ஆக கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். AC திரையரங்குகளுக்கு ₹200ஆக உயர்த்தப்பட வேண்டும் . Non-AC திரையரங்குகளுக்கு ₹120 என கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக இப்போது தியேட்டருக்கு வரும் ஏழை மற்றும் நடுத்தர மக்களும் இனி வரும் காலங்களில் தியேட்டருக்கு வராமல் போகக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளது.
எதிர்ப்பு: இந்நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் இந்தக் கோரிக்கைக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏற்கெனவே திரையரங்கிற்குள் வருபவர்கள் விலைவாசியால் ஹோம் தியேட்டருக்குள் புகுந்துகொண்டிருக்கிறார்கள். இன்னமும் டிக்கெட் விலையை அதிகப்படுத்தினால் மக்கள் எப்படி படம் பார்க்க வருவார்கள்??! சிறிய படங்களின் நிலை என்னாகும்..?! அரசும், திரையரங்க உரிமையாளர்களும் திரையரங்கிற்கு வருபவர்களைப் பற்றியும் நினைத்துப் பார்த்து இதை தவிர்க்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











