சிஎம் விஜய் இதையும் சீர் செய்ய வேண்டும்!.. ’மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கோரிக்கை!
சென்னை: சிம்புவின் மாநாடு படத்தை தயாரித்தவும் 'மிக மிக அவசரம்' படத்தை இயக்கியவருமான சுரேஷ் காமாட்சி முதலமைச்சர் விஜய்யின் புதிய ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் நடைபெற்று வரும் சீர்திருத்தத்தை மனதார பாராட்டியுள்ளார். மேலும், சினிமா உலகத்தையும் கொஞ்சம் சீர் செய்ய வேண்டும் என்கிற முக்கிய கோரிக்கையையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கனவுத் தொழிற்சாலையான சினிமா உலகில் முன்னணி நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் மட்டுமே செல்வ செழிப்பாக வாழ்வதும் மற்றவர்கள் கஷ்டப்பட்டு வரும் சூழலையும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். மேலும், டிக்கெட் முதல் தின்பண்டங்கள், பார்க்கிங் கட்டணம் என ஏகப்பட்ட பகல் கொள்ளையும் நடைபெற்று வருகிறது என்கிற குற்றச்சாட்டுகளையும் பலர் அடுக்கி வருகின்றனர்.

இந்நிலையில், டிக்கெட் டிரான்ஸ்பரன்ஸி வேண்டும் என சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.
சுரேஷ் காமாட்சியின் வாழ்த்தும் கோரிக்கையும்:
"சீர்திருத்தம் செய்ய களமிறங்கியுள்ள மாண்புமிகு முதல்வர், மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள், அமைச்சர் பெருமக்கள் ஆகியோருக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
பள்ளிக் கல்வித் துறை, அறநிலையத் துறை, மற்றும் பத்திரப் பதிவுத் துறையில் சீர்மிகு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.
மக்களைப் பெரும் அவதிக்குள்ளாக்கி வந்த இலஞ்ச இலாவணியம் இதன் மூலம் கட்டுப்படக் கூடும் என்பது பெரும் மகிழ்வழிக்கிறது.
அலைக்கழிக்கப்பட்டோர் இடத்திலிருந்து இதைப் பார்த்தால் இதன் பயன்கள் புரியும்.
இதற்கு காரணமான அனைவருக்கும் மற்றுமொரு முறை நன்றி கூறிக்கொள்கிறேன்.
அதேபோல் புரையோடிப்போய் மீள முடியாமல் பல வருடங்களாகத் தவித்துக்கொண்டிருக்கும் இத்திரையுலகையும் சீர் செய்ய தங்கள் பார்வை பட வேண்டும்.
டிக்கெட் டிரான்ஸ்பரண்ஸி முறையையும்... திரையரங்குகள் ஒதுக்கீடு முறையையும் சீர் செய்ய வேண்டும்.
பல தயாரிப்பாளர்கள் பணத்தை முதலீடு செய்துவிட்டு அதை மீட்டெடுப்பதில் உள்ள சிக்கல்களால் நலிவடைந்து விடுகிறார்கள் என்பது தாங்கள் அறிந்ததே!
வலியையும் வேதனையையும் அனுபவிக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு புதிய மாற்றத்தைக் காண... திரையுலகில் தொடர்ந்து பயணம் செய்ய நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சுவீர்கள் என நம்புகிறேன்.
டிக்கெட் டிரான்ஸ்பரண்ஸி முறையைக் கொண்டு வர ஆன எல்லா முயற்சிகளையும் மாண்புமிகு முதல்வர் மேற்கொண்டு சாத்தியப்படுத்த வேண்டும் என இப்பதிவின் வாயிலாகக் கோரிக்கை வைக்கிறேன். இது தங்களால் மட்டுமே சாத்தியப்படுத்த இயலும்.
கடந்த காலங்களில் நடந்த கசப்பான சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி" என பதிவிட்டுள்ளார்.
புதிய திரைப்படங்கள் வெளியான முதல் 7 நாட்களுக்கு சிறப்புக் காட்சியான காலை 9 மணிக்கு திரையிடும் அனுமதியை முதலமைச்சர் விஜய் வழங்கிய நிலையில், அடுத்தடுத்த கோரிக்கைகளை அவர் செவி மடுப்பாரா? சீர்த்திருத்தம் செய்வாரா? என்பதையும் வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications