Vanangaan - பெரும் அதிர்வை ஏற்படுத்தும் கதைதான் வணங்கான்.. சுரேஷ் காமாட்சி ஷேரிங்ஸ்
சென்னை: Vanangaan (வணங்கான்) வணங்கான் படத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் கதையை பாலா தொட்டிருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டின் முகத்தை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் பாலா. பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்துவிட்டு சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாலா. முதல் படத்தை காதல் கதையாக எடுத்தாலும் அதை அவர் உருவாக்கிய விதம் புதுமையாக இருந்ததால் படம் மெகா ஹிட்டானது. அதன் பிறகு அவர் இயக்கிய நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதில் பிதாமகன் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.

உருவாக்கிய பாலா: தொடர்ந்து அவர் இயக்கத்தில் நான் கடவுள் படம் உருவானது. அந்தப் படத்தில் முதல் அஜித் நடிக்க வேண்டியிருந்தது. சில பிரச்னைகளால் அஜித் வெளியேற ஆர்யா உள்ளே வந்தார். படம் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து அவர் இயக்கிய அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் ஆகிய படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றன. ஆனால் அந்த படங்களில் நடித்த ஹீரோக்கள் இன்று நல்ல நிலையில் இருப்பது கவனிக்கத்தக்கது.
பிரச்னைகள்: சூழல் இப்படி இருக்க விக்ரம் மகன் துருவ்வை வைத்து அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான வர்மா படத்தை இயக்கினார் பாலா. ஆனால் அவரது உருவாக்கம் திருப்தி தராததால் அந்தப் படம் பரணில் வைக்கப்பட்டது. இது பாலாவுக்கு பெரும் கரும்புள்ளியாக கருதப்பட்டது. அந்தப் பிரச்னை ஓய்வதற்குள் பாலாவும் அவரது மனைவி மலரும் விவாகரத்து பெற்றனர். அதற்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
வணங்கானிலும் பிரச்னை: தொடர்ந்து பிரச்னைகளை சந்தித்துவந்த பாலாவுக்கு ஆசுவாசம் கிடைக்கும் விதமாக சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை இயக்கும் சூழல் உருவானது. ஆனால் அந்தப் படத்திலிருந்து சூர்யா வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய்யை வைத்து வணங்கானை தொடங்கியிருக்கிறார். ரோஷினி பிரகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.
ஃபர்ஸ்ட் லுக்: படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவந்த சூழலில் இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ஒரு கையில் பெரியாரையும் மற்றொரு கையில் பிள்ளையாரையும் தூக்கியபடி சேறும் சகதியுமாக நிற்கிறார் அருண் விஜய். இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

சுரேஷ் காமாட்சி: இந்நிலையில் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், "இங்கு காலத்தை வெல்வது முக்கியம். நம் முன்னே எத்தனை சமர் வந்தாலும் நின்று எதிர்கொண்டு இன்று தனக்கென படைப்பாற்றலில் மிகச்சிறந்த இடத்தை தக்க வைத்திருக்கும் நம் தமிழ் சினிமாவின் வரம் இயக்குநர் அண்ணன் பாலா. அவரது இதுவரையிலான படைப்புகள் மக்கள் மத்தியில் அதிர்வுகளை உருவாக்கியிருக்கின்றன.
அதேபோல் இன்று வணங்கான் படத்தின் முதல் பார்வை வெளியாகியிருக்கிறது. பெரும் அதிர்வை ஏற்படுத்தும் ஒரு கதையை தொட்டிருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். சகோதரர் அருண் விஜய்க்கு இது மற்றொரு பெயர் சொல்லும் அவதாரம். இனி உங்கள் கோணத்துக்கு விட்டுவிடுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். மீனவ பிரச்னையை மையமாக வைத்து உருவாவதாக கூறப்படும் வணங்கானை பாலாவுடன் சேர்ந்து சுரேஷ் காமாட்சியும் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











