எழுத்தாளர் ம.காமுத்துரை நாவல் சினிமாவாகிறது.. மீண்டும் படம் இயக்குகிறார் 'மாநாடு' தயாரிப்பாளர்!
சென்னை: 'மிக மிக அவசரம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் புதிய படமொன்றை இயக்க முடிவு செய்துள்ளார் சுரேஷ் காமாட்சி.
அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களைத் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி.
தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் இவர் இப்போது சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை தயாரித்து வருகிறார்.

அப்துல் காலிக்
வெங்கட்பிரபு இயக்கும் இதில், சிம்பு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா, எஸ்ஏசி, ஒய் ஜி மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே. பாரதி, பிரேம்ஜி, உதயா உட்பட பலர் நடிக்கின்றனர். இதில், அப்துல் காலிக் என்ற கேரக்டரில் நடிக்கிறார், சிம்பு.

நெற்றியில் புல்லட்
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. அந்த போஸ்டரில், முகத்தில் ரத்தம் வடிய, நெற்றியில் புல்லட் இருக்க, அமர்க்களமாகப் பார்க்கிறார் சிம்பு. அந்த போஸ்டரை சிம்பு ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர்.

மிக மிக அவசரம்
இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மீண்டும் படம் இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே மிக மிக அவசரம் என்ற படத்தை இயக்கி இருந்தார். பெண் போலீஸ் பற்றிய இந்தப் படம் கவனிக்கப்பட்டது.

முற்றாத இரவொன்றில்
இதையடுத்து, பிரபல எழுத்தாளர் ம.காமுத்துரை எழுதிய 'முற்றாத இரவொன்றில்' என்ற நாவலைத் தழுவி படம் இயக்க இருக்கிறார். நாவலைப் படமாக்கும் உரிமையை ம.காமுத்துரையிடம் முறைப்படி பெற்றுள்ளார் சுரேஷ் காமாட்சி. தற்போது இதில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











