தியேட்டரை தெறிக்கவிட்ட கேப்டன் மில்லர்.. ஓடி வந்து வாழ்த்திய தயாரிப்பாளர்!
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் பீரியட் ஆக்ஷன் டிராமா பாணியில் உருவாக கேப்டன் மில்லர் திரைப்படம் நேற்று உலகளவில் 900க்கும் மேற்பட்ட திரையரங்களில் வெளியானது. இப்படத்தில் தனுஷின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் படத்தின் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் நடிகர் தனுஷை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்தினார்.
ராக்கி மற்றும் சாணிக்காகிதம் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், கன்னட நடிகர் ஷிவ்ராஜ்குமார், சந்தீப் கிஷான், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், நாசர் உள்பட பலரும் நடித்துள்ளனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்தார்.

வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கிய நிலையில், படத்தில் ரத்தம் தெறிக்கும், துப்பாக்கி சத்தமும் கதை பிளந்தது. இருந்தாலும், இப்படத்தில் ஈசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனுஷ், நான் நடிப்பின் அசுரன் என்பதை நிரூபித்துள்ளார். தியேட்டரில் நேற்று வெளியான படத்தைப் பார்த்த ரசிகர்கள் தனுசை கொண்டாடி வருகின்றனர். இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நடிகர் தனுஷ் தன் மகன்களுடன் ரோகினி தியேட்டரில் பார்த்து ரசித்தார்.
கேப்டன் மில்லர் படத்தின் கதை: இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் நடக்கும் கதை தான் கேப்டன் மில்லர். இதில் ஆங்கிலேயர்களின் ராணுவத்தில் சேர வேண்டும் என ஆசைப்படுகிறார் கதாநாயகன் தனுஷ். இதற்காக பல கட்ட பயிற்சிகள் செய்து இறுதியில் தனுஷூக்கு ஆங்கிலேயர்களின் ராணுவத்தில் வேலை கிடைத்து விடுகிறது. அதில், துப்பாக்கி சுடுதலில் கை தேர்ந்த ஒரு சிறந்த சிப்பாயாகிறார் தனுஷ். இதையடுத்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடும் இந்திய மக்களை சுட்டுதள்ள தனுஷுக்கு உத்தரவு வருகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த தனுஷ், பின் அனைவரையும் சுட்டு கொன்றுவிடுகிறார்.
ஓயாத துப்பாக்கி சத்தம்: தனது சொந்த மக்களை கொன்று விட்டோமே என்ற எண்ணத்தில் இருக்கும் தனுஷ், இனி இதை செய்ய கூடாது என முடிவெடுத்து. இதற்கு காரணமாக இருந்த, ஆங்கிலேய தலைமை வீரரை கொன்றுவிடுகிறான். இதனால், தனுஷ் ஆங்கிலேயர்கள் ராணுவம் தேடும் குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறான். அதன்பின் என்ன நடந்தது.. ஆங்கிலேயர்களின் கையில் தனுஷ் சிக்கினாரா.. அவர் சந்தித்த பிரச்சனை என்ன என்பதுதான் படத்தின் மீதி கதை.
நேரில் வாழ்த்து: கேப்டன் மில்லர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் நடிகர் தனுஷை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, தயாரிப்பு சத்ய ஜோதி பிலிம்ஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், தனுஷூக்கு வாழ்த்து தெரிவித்த புகைப்படத்தை பதிவிட்டு, வின்னர் வின்னர் கேப்டன் மில்லர்... உலகம் முழுவதும் இந்த பிளாக்பஸ்டர் வரவேற்பை கொடுத்த ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











