கமல் ஹாசன் பற்றி பேசுவதற்கு திருப்பதி பிரதர்ஸுக்கு உரிமை இல்லை.. தயாரிப்பாளர் விளாசல்
சென்னை: தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் லிங்குசாமி. இவர் தனது சகோதரர்களுடன் சேர்ந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்திவருகிறார். பல தரமான படங்களை தயாரித்த அந்த நிறுவனம் தயாரித்த படம்தான் கமல் ஹாசன் நடித்த உத்தம வில்லன். படம் படுதோல்வியை சந்தித்தது. சூழல் இப்படி இருக்க கமல் ஹாசன் மீது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது.
கமல் ஹாசன் இந்திய சினிமாவின் பல்கலைக்கழகம் என்று புகழப்படுபவர். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஏதாவதொரு சோதனை முயற்சியை செய்து பார்ப்பவர். அது சில நேரங்களில் சக்சஸ் ஆகும்; சில நேரங்களில் ஃபெயிலியர் ஆகும். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கமல் தனது தலையில் ஏற்றிக்கொள்வதில்லை. அவரைப் பொறுத்தவரை கலையில் ஏதாவதொரு புது விதத்தை புகுத்த வேண்டும் என்பதுதான் முதல் எண்ணமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தமவில்லன்: அப்படிப்பட்ட ஒரு படம்தான் உத்தமவில்லன். கமல் ஹாசன் கதை எழுத; அவரது நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த இயக்க; ஆண்ட்ரியா, ஊர்வசி, கே.பாலசந்தர், எம்.எஸ்.பாஸ்கர், பூஜா குமார் உள்ளிட்ட பலர் நடிக்க 2015ஆம் ஆண்டு வெளியானது அந்தப் படம். படத்தை இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்கள் இணைந்து நடத்தும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது. கண்டிப்பாக இந்தப் படம் தங்களது பேனருக்கு லாபத்தை மட்டும் ஈட்டிக்கொடுக்காமல் நல்ல பெயரையும் சம்பாதித்துக்கொடுக்கும் என்று லிங்கு அண்ட் பிரதர்ஸ் நினைத்தார்கள்.
அட்டர் ஃப்ளாப்: ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக நடந்தது. படம் விமர்சன ரீதியாக இப்போது கொண்டாடப்பட்டாலும்; படம் ரிலீஸானபோது கொண்டாடப்படவில்லை. முக்கியமாக படம் வணிக ரீதியாக கடுமையான அடி வாங்கியது. இதன் காரணமாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சொல்ல முடியாத நிதி நெருக்கடியில் சிக்கியதாக திரைத்துறையில் இப்போதும் ஒரு பேச்சு உண்டு. அந்த வருத்தத்தை லிங்குசாமியும் சில பேட்டிகளில் பகிர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் கொடுத்த வாக்குறுதி: லிங்குசாமி சில வாரங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில்கூட, வேறு கதை செய்யலாம் என்பதுதான் எங்களது நோக்கமாக இருந்தது. ஆனால் கமல் ஹாசன் இந்தக் கதையை படமாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக தெரிவித்திருந்தார். இதற்கிடையே படம் படுதோல்வியை சந்தித்ததன் காரணமாக, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வேறு ஒரு படம் செய்து தருவதாக கமல் ஹாசன் வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால் இடையில் சில காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்து; இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
கமல் மீது புகார்: இருந்தாலும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு இதுவரை கமல் ஹாசன் சொன்னபடி படம் நடித்துத்தரவில்லை. இந்நிலையில் அவர் மீது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது. அந்தப் புகாரில், " எங்களுக்கு விருப்பமில்லாத உத்தமவில்லன் திரைப்பட கதையில் நடித்து அது மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்துவிட்டது. அதற்கு பதில் புதிய படத்தில் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடித்துத் தருவதாக கமல் ஹாசன் உத்தரவாதம் அளித்திருந்தார்.
9 ஆண்டுகள் ஆகியும் இல்லை: ஆனால் அந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டு 9 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த நிலையிலும் எங்கள் நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு விருப்பமான கதையில் கமல் ஹாசன் நடித்துக்கொடுக்கவில்லை. எனவே இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தது.
தேனப்பன் விளாசல்: இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தேனப்பன் இதுகுறித்து பேசுகையில், "உத்தம வில்லன் படம் ரிலீஸ் ஆகும்போது அதற்கு ஃபைனான்ஸ் செய்தது ஞானவேல் ராஜாதான். ரைட்ஸ் அவரிடம்தான் இருக்கிறது. திருப்பதி பிரதர்ஸ் தலையிடுவது முறையான செயல் இல்லை. 2015ஆம் ஆண்டே கமல் ஹாசன் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் செய்து தருவதாக கூறினார். ஆனால் அப்போது தங்களால் படத்தை தயாரிக்க முடியாது என்று அந்த நிறுவனம்தான் கூறியது" என்றார்.


Click it and Unblock the Notifications











