Thirumalai: ரஜினிகாந்த், விஜய், தனுஷைவிட இவர் பெரிய ஆளா.. அசோக்செல்வன் குறித்து தயாரிப்பாளர் ஆத்திரம்!
சென்னை: நடிகர் அசோக் செல்வன், அவந்திகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள எமக்கு தொழில் ரொமான்ஸ் என்ற படத்தின் இசை வெளியீடு தற்போது நடந்து முடிந்துள்ளது. அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை திருமலை தயாரித்துள்ளார். இந்நிலையில் தற்போது இசை வெளியீட்டில் பங்கேற்றுள்ள திருமலை நடிகர் அசோக் செல்வன் குறித்த தன்னுடைய ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் அடுத்தடுத்து வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இல்லாவிட்டால் நடிகர்கள் முன்னிலைக்கு வர முடியாது என்றும் அவர்களை மறந்தவர்களை காலம் கீழே தள்ளிய கதைகள் ஏராளம் என்றும் திருமலை ஆத்திரத்துடன் பேசியுள்ளார். இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் அசோக் செல்வன் பங்கேற்காத நிலையில், நடிகர்கள் படத்தின் பிரமோஷன்களில் பங்கேற்பதை தயாரிப்பாளர் சங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் திருமலை பேசியுள்ளார்.

நடிகர் அசோக் செல்வன்: நடிகர் அசோக் செல்வன் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் படம் மிகச் சிறப்பான வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுக் கொடுத்த நிலையில் முன்னதாக அவரது நடிப்பில் வெளியான போர் தொழில் படமும் அவருக்கு சிறப்பாக கை கொடுத்திருந்தது. இந்நிலையில் அசோக் செல்வன் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் எமக்குத் தொழில் ரொமான்ஸ். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக நடிகர் ஆர்யாவால் வெளியிடப்பட்டிருந்தது. இந்த படத்தின் டைட்டில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
எமக்குத் தொழில் ரொமான்ஸ்: பாரதியாரின் கவிதை வரிகளான எமக்குத் தொழில் கவிதை என்ற தலைப்பை சற்று மாற்றி இந்த படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு தற்போது சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று பேசிய தயாரிப்பாளர் திருமலை, தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார். இந்த படத்தின் கதையை அசோக் செல்வனிடம் கூறிய பின்பு அவரது டேட்டிற்காக தொடர்ந்து ஏழு மாதங்கள் தாங்கள் காத்திருந்ததாக திருமலை தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் படத்தின் இயக்குனர் கதை சொல்லி அது பிடித்த பின்பு அசோக் செல்வன் ஓகே சொன்னதாகவும் ஆனால் டேட்டிற்காக தொடர்ந்து தன்னை காக்க வைத்ததாகவும் திருமலை பேசியுள்ளார்.
அசோக் செல்வன் குறித்து கேள்வி: திருமணத்திற்கு பிறகு தன்னுடைய அப்பா -அம்மாவிற்கு அசோக் செல்வன் காஸ்ட்ரி காரை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் இதெல்லாம் யாருடைய பணம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் திருமலை., இதே போல படத்தின் பிரமோஷன்களில் அசோக் செல்வன் பங்கேற்காதது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்டவை முக்கியமான நடவடிக்கையை எடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் அவர் பேசியுள்ளார். அசோக் செல்வனும் ஒரு படத்தை தயாரித்து உள்ளதாகவும், அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் அவருக்கும் தெரியும் என்ற போதிலும் தயாரிப்பாளர்களை அவர் அலைக்கழிப்பதாக திருமலை குற்றம் சாட்டியுள்ளார்.
பிரமோஷன்களில் முன்னணி நடிகர்கள்: தற்போது அசோக் செல்வன் 2 கோடி வரை தன்னுடைய படங்களுக்காக சம்பளம் பெறுவதாகவும் ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தான் அவருக்கு 31 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் அதற்கு வட்டி போட்டு பார்த்தால் தற்போது ஒரு கோடி வரை நெருங்கும் என்றும் திருமலை பேசியுள்ளார். ஒரு இயக்குனரோ தயாரிப்பாளரோ இல்லாவிட்டால் எந்த நடிகனும் நடிகையும் முன்னுக்கு வர முடியாது என்று குறிப்பிட்டுள்ள திருமலை, அதை கவனத்தில் கொண்டு செயல்பட்டவர்கள் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களும் படத்தின் பிரமோஷன்களுக்காக ஓடி வருவதாகவும் ஆனால் அசோக் செல்வன் ப்ரோமோஷன்களில் பங்கேற்காமல் உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இசை வெளியீட்டில் ஜாம்பவான்கள்: ஆர்கே செல்வமணி உள்ளிட்ட ஜாம்பவான்கள் இந்த படத்தின் இசை வெளியீட்டிற்காக தங்களின் நேரத்தை செலவழித்து வந்துள்ள நிலையில் படத்தின் நாயகனான அசோக் செல்வன் வராமல் இருப்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.


Click it and Unblock the Notifications











