தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் - டிசம்பர் 10 அன்று அனல் பறக்குமா?
சென்னை : தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 10-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான அழைப்பு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கந்துவட்டி பிரச்னையால் சசிகுமாரின் மைத்துனரும் தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தற்கொலைக்கு காரணம் தயாரிப்பாளரும், சினிமா ஃபைனான்சியருமான அன்புசெழியன் தான் என்பதால் இன்னும் பரபரப்பு அதிகரித்தது. தலைமறைவாக இருந்து வரும் அன்புச்செழியன் தற்போது முன் ஜாமீன் கேட்டு மனு கொடுத்துள்ளார்.

பொதுக்குழுக் கூட்டம்
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் தலைமையிலான அணி பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் வருகிற டிசம்பர் 10-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் காலை 10 மணிக்கு நடக்கிறது. இதற்கான அழைப்பு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

முக்கிய பிரச்னைகள்
தமிழ்நாடு அரசின் கேளிக்கை வரி பிரச்னை, கேபிள் டி.வி பிரச்னை, கந்துவட்டி பிரச்னை, தியேட்டர் கட்டணம் உயர்வு, மெர்சல் படத்துக்கு ஏற்பட்ட அரசியல் பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்க இருக்கிறார்கள்.

கந்துவட்டி பிரச்னை
இந்தக் கூட்டத்தில் சினிமாவை ஆட்டிப் படைக்கும் கந்துவட்டி பிரச்னை பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. குறிப்பாக கந்துவட்டி கொடுமையால் தவிக்கும் தயாரிப்பாளர்களின் பிரச்னை குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.

முக்கிய முடிவுகள்
இந்த பிரச்னையில் ஃபைனான்சியர் அன்புசெழியனுக்கு ஆதரவான தயாரிப்பாளர்கள் தனி அணியாக திரண்டு குரல் கொடுப்பார்கள் என்று தெரிகிறது. பொதுக்குழுவில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள், விவாதிக்க வேண்டிய தலைப்புகள், நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்று கூடும் செயற்குழுவில் விவாதித்து முடிவு செய்கிறார்கள்.

அன்புச்செழியனுக்கு ஆதரவு
கலைப்புலி எஸ்.தாணு, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, விஜய் ஆண்டனி, தேவயானி, சுந்தர்.சி உள்ளிட்டோர் அன்புச்செழியனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஃபைனான்சியர்கள் இல்லை என்றால் தமிழ் சினிமாவே இயங்காது என்பது இவர்களின் வாதமாக இருக்கிறது.

அன்புச்செழியனுக்கு எதிர்ப்பு
அன்புச்செழியனுக்கு எதிரானவர்கள் அணியில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், ஞானவேல்ராஜா, கார்த்தி, சி.வி.குமார், கரு.பழனியப்பன், உள்பட பலர் இருக்கிறார்கள். அன்புச்செழியனுக்கு எதிரான கருத்துகளை இவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

காரசார விவாதம்
கந்துவட்டியை சினிமாவை விட்டு ஒழித்தால், தயாரிப்பாளர்களின் பணப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்தும் விவாதிக்க இருக்கிறார்கள். கந்துவட்டிக்கு ஆதரவும், எதிர்ப்பும் தயாரிப்பாளர்களிடையே இருப்பதால் கூட்டத்தின் விவாதம் காரசாரமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











