பாகுபலி 2 பஞ்சாயத்தைத் தீர்த்து வைத்த தயாரிப்பாளர் சங்கம்!
பாகுபலி-2க்கு தடை கோரிய வழக்கில் இருதரப்பும் சமாதானம் ஆனதால் படத்திற்கான சிக்கல் தீர்ந்ததோடு, படம் ரிலீஸாவதற்கான தடையும் நீங்கியுள்ளது.
இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பிரமாண்ட படம் ‛பாகுபலி-2. பாகுபலி படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 5000-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பாகுபலி-2 படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்சன் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் பாகுபலி 2 படத்தை வெளியிட தடை கோரி ஏசிஇ நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்தது.
அதில், 'ஸ்ரீகிரீன் புரொடக்ஷ்ன் நிறுவனத்தின் சரவணன் என்பவர் பாகுபலி-2 படத்திற்காக தன்னிடம் ரூ.1.8 கோடி கடன் வாங்கியிருந்தாகவும், படம் வெளியீட்டிற்கு முன்பாக ரூ.10 லட்சம் சேர்த்து மொத்த பணத்தையும் திருப்பி தந்துவிடுவதாகவும் கூறியிருந்தார். ஆனால் தற்போது படத்தை வேறு ஒருவருக்கு மாற்ற முயற்சிக்கிறார். ஆகவே, எங்கள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாவிடில் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்,' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, படத்திற்கு தடை விதிக்க முடியாது. இதுதொடர்பாக விநியோகஸ்தர் சரவணன் வருகிற 18-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, வழக்கை ஏப். 18-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதன்படி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பினரும் பேசி சமாதானம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதோடு பட ரிலீஸில் இருந்த சிக்கலும் தீர்ந்தது.
இரு தரப்பும் சமாதானமாகப் போக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு இந்த பிரச்சனை சுமுகமாக தீர்த்து வைத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications