படத்தின் விளம்பரங்களில் பங்கேற்காத நடிகைகளுக்கு சம்பளம் கட்- தயாரிப்பாளர் சங்கம் முடிவு
சென்னை: தமிழ்ப் படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் இசை வெளியீட்டு விழாக்களில் பங்கேற்காவிட்டால் இனி நடிகைகளின் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை பிடித்துக் கொள்ள தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல கோடி செலவில் உருவாகும் படங்களை விளம்பரபடுத்த நடிகர், நடிகைகளை வைத்து பத்திரிகையாளர் சந்திப்பு, இசை வெளியீட்டு விழா, ட்ரைலர் வெளியீட்டு விழா, தியேட்டர் விசிட் போன்றவற்றை நடத்துவது வழக்கம்.
ஆனால் இவற்றில் நடிகர்கள் மட்டும்தான் பங்கேற்கின்றனர். நடிகைகள் பெரும்பாலும் வருவதே இல்லை.

பொதுவாக நடிகைகள் டப்பிங் பேசி முடித்த பிறகுதான் சம்பளம் முழுவதையும் பெறுவார்கள். ஆனால் பெரும்பாலான நடிகைகளுக்கு தமிழே தகராறு என்பதால், படப்பிடிப்பின் இறுதி நாளில் மொத்தத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள்.
அதன் பிறகு அந்தப் படத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி நடந்து கொள்கிறார்களாம். விளம்பர நிகழ்ச்சிகளுக்கும் வராமல், இசை வெளியீட்டு விழாக்களுக்கும் வராமல் இழுத்தடிக்கிறார்களாம்.
அப்படிப்பட்ட நடிகைகளுக்கு சம்பளத்தை முன் கூட்டியே கொடுக்காமல் சுமார் 20 சதவீதம் வரை பிடித்தம் செய்து வைத்துக் கொள்வது என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளது.
இந்த நடிகைகள் பட்டியலில் நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, அனுஷ்கா, டாப்சி, லட்சுமி மேனன், நஸ்ரியா என பல நடிகைகள் உள்ளனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று மாலை சங்க அலுவலகத்தில் நடக்கிறது.
சங்க தலைவர் கேயார் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், நடிகைகளின் சம்பளத்தை குறைப்பது குறித்து அதிகாரப்பூர்வமா அறிவிக்கப்படும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











