'எப்படி இருந்த நீங்க...' ஸ்டன்ட் யூனியன் பற்றி தயாரிப்பாளர் சங்கம் நெகிழ்ச்சி
சென்னை : தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி சண்டைக் கலைஞர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கத்தின் பொன்விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதற்கான விழா இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
இதையொட்டி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
'சினிமா சண்டை கலைஞர்களுக்கென்று தனி சங்கம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. தங்களை வருத்திக் கொண்டு மக்களை மகிழ்விக்கும் உன்னத கலைஞர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறோம்.
சாதிக்க நினைப்பவர்களே இங்கே வருவார்கள் :

உயிரைப் பணயம் வைத்து
சண்டைக் காட்சிகள் இல்லாத சினிமா உப்பில்லாத உணவுக்குச் சமம் என்கிறார்கள் ரசிகர்கள். உயிரை பணயம் வைத்து சினிமாவை வாழ வைக்கும் உங்கள் பணி மகத்தானது. சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லோருமே சினிமாவுக்கு வருகிறார்கள். ஆனால் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும்தான் ஸ்டன்ட் யூனியனுக்கு வருவார்கள்.

எப்படி இருந்த நீங்க... இப்படி :
தேக்குமர உடற்கட்டோடு திரைத்துறைக்கு வரும் நீங்கள் ஓய்வு பெறும் காலங்களில் சாறு பிழியப்பட்ட சக்கையாகவே வீடு திரும்புகிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். கடந்து வந்த 50 ஆண்டுகள் மட்டுமல்ல உங்கள் கலை பயணம் 500 ஆண்டுகள் ஆனாலும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.' எனத் தயாரிப்பாளர்கள் சங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி, கமல் பங்கேற்பு :
இந்த விழாவில் ரஜினி, கமல், மோகன்லால் மம்முட்டி உள்ளிட்ட முன்னணித் தென்னிந்திய நட்சத்திரங்கள் கலந்துகொள்கிறார்கள். நடிகர்கள் ஜீவா, பரத், காஜல் அகர்வால், ஸ்ரேயா, டாப்ஸி உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகளின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

சாகச நிகழ்ச்சிகள் :
இந்தக் கொண்டாட்ட நிகழ்விற்காக தமிழகம் முழுவதும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. சண்டைக் கலைஞர்களின் சாகச நிகழ்ச்சி, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா உள்ளிட்டோர் பங்குபெறும் காமெடி நாடகம் ஆகியவை நடத்தப்பட இருக்கின்றன.


Click it and Unblock the Notifications