Exclusive : “சண்டைய வேடிக்க பார்க்குறீயே...” ஷூட்டிங் என தெரியாமல் நடிகரை திட்டித் தீர்த்த மக்கள்!
ராஜா ரங்குஸ்கி படத்தில் போலீசாக நடித்துள்ளார் நடிகர் சிரிஷ்.
Recommended Video

சென்னை: ராஜா ரங்குஸ்கி பட ஷூட்டிங்கின் போது நடிகர் சிரிஷை நிஜ போலீஸ் எனக் கருதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனராம்.
ஜாக்சன் துரை' படத்திற்கு பிறகு தரணிதரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'ராஜா ரங்குஸ்கி'. 'மெட்ரோ' பட புகழ் சிரிஷ் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் சாந்தினி நாயகியாக நடித்திருக்கிறார். சக்தி வாசன் மற்றும் பர்மா டாக்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.
'கொலை மற்றும் அது தொடர்பான விசாரணையும் தான் இப்படத்தின் கதைக்களம். டிரெய்லரிலேயே இது போலீஸ் ஸ்டோரி என்பது தெள்ளத் தெளிவாகிறது. இப்படம் இவ்வாரம் வெள்ளிக்கிழமை ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில், ராஜா ரங்குஸ்கி படத்தை இயக்கிய அனுபவம் குறித்து ஒன் இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார் இயக்குநர் தரணிதரன். அதில் அவர் கூறியதாவது:

கதைக்களம்:
ஒருநாள் எதேச்சையாக செய்தித்தாள் ஒன்றில் பார்த்த கொலைச் சம்பவம் தான் இப்படத்திற்கான கருவாக என் மனதில் உருவானது. அந்த ஒரு புள்ளியில் இருந்து திரைக்கதை உருவாக்கினேன். அதன் அடிப்படையில் பார்க்கையில் இப்படம் ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது தான்.

போலீசாக சிரிஷ்:
இப்படத்தில் சிரிஷ் போலீசாக நடித்துள்ளார். பெரிய அதிகாரியாக இல்லாமல் பீட் போலீசாக அவர் வருகிறார். படப்பிடிப்பின் போது போலீஸ் உடையில் இருந்த அவரை பொதுமக்கள் நிஜ போலீஸ் எனக் கருதிய சம்பவங்களும் நடந்துள்ளது.

மக்களிடம் திட்டு:
சென்னை மிண்ட்டில் எங்கள் படப்பிடிப்பு நடந்த பகுதிக்கு அருகில் ஒரு தகராறு நடந்தது. இருவர் திடீரென பயங்கரமாக அடித்துக் கொண்டனர். அப்போது அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் வேகமாக சிரிஷிடம் வந்து, ‘நீங்க எல்லாம் ஒரு போலீசா. அங்க பயங்கரமாக சண்டை நடக்குது. தடுக்காம வேடிக்கை பார்க்கிறீர்களே' எனத் திட்டினர்.

ரீல் போலீஸ்:
அவர்களுக்கு சிரிஷ் ஒரு நடிகர், நிஜ போலீசல்ல, சினிமா போலீஸ் என புரிய வைப்பதற்குள் போதும் போதும் என ஆகி விட்டது. இப்படி இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்துள்ளன. அந்தளவிற்கு பாத்திரமாகவே ஒன்றிப் போய் நடித்துள்ளார் சிரிஷ்.

சாந்தினி:
முதலில் இப்படத்தின் நாயகியாக நடிக்க பூஜா தேவாரியாவைத் தான் அணுகினோம். முதலில் சரி என்று சொன்னவர், கடைசி நேரத்தில் தேதிகள் இல்லாததால் படத்தில் இருந்து விலகிக் கொண்டார். இதனால் சாந்தினியை நாயகியாக்கினோம். கொடுத்த கதாபாத்திரத்தை அவர் சிறப்பாக நடித்துள்ளார்.

காதல் காட்சிகள்:
படத்தில் பத்து நிமிடங்கள் தான் காதல் காட்சிகள் வரும். கொலைக் கதைக்களத்தில் அந்தக் காட்சிகளின் தேவை என்ன என்பதை படம் பார்க்கும் போது தெரிந்து கொள்வீர்கள். தனி டிராக்காக இல்லாமல் படத்தோடு சேர்ந்த காமெடிக் காட்சிகள் இருக்கும்.

நம்பிக்கை:
படத்தை பார்க்கும் இரண்டரை மணி நேரமும் மக்கள் ரசிக்கும்படி இருக்க வேண்டும் என உழைத்திருக்கிறேன். நிச்சயம் இப்படம் வெற்றியடையும் என நம்புகிறேன்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











