Don't Miss!
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'கிழிக்கும்' சோஷியல் மீடியா... பீதியில் 'புலி' தியேட்டர்கள்.. கட்டணத்தை டபுளாக்கி வசூல் வேட்டை!
சென்னை: புலி படத்திற்கு சோஷியல் மீடியாவில் ஒரு பிரிவு சரமாரியாக நெகட்டிவ் விமர்சனத்தில் ஈடுபட்டிருப்பதால் புலி படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர் உரிமையாளர்கள் பீதியடைந்துள்ளனராம். எங்கே போட்ட முதல் வராமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் கட்டணத்தை டபுளாக்கி படம் பார்க்க வருவோரிடம் கறந்து வருவதாக புகார்கள் குவிய ஆரம்பித்துள்ளன.
விஜய் நடித்த புலி படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதற்கு சில மாதங்களுக்கு முன்பு வந்த பாகுபலி படத்தால் தற்போது புலி படத்திற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டு விட்டது.
என்னதான் ஒப்பிடாதீர்கள் என்று தயாரிப்புத் தரப்பும், புலி படக் குழுவும் கோரிக்கை வைத்தும் கூட பாகுபலி பிரமாண்டத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் மனோபாவத்துடன் தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு புலி படம் சற்று ஏமாற்றத்தையே கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சோஷியல் மீடியாவில் வறுத்தெடுக்கும் விமர்சனங்கள்
ஒரு படம் சிக்கினால் சும்மாவே காட்டு காட்டு என்று காட்டுவார்கள் சோஷியல் மீடியா பிரகஸ்பதிகள். இப்போது அஜீத் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் போட்டுத் தாக்கி வருகின்றனர் புலியை.
சின்னப் பசங்க சண்டை போல
ஸ்கூலில் சின்னப் பசங்க அடித்துக் கொள்வார்களே.. அதுபோல புலி படத்தைப் போட்டு சரமாரியாக வறுத்தெடுத்து வருகின்றனர். அதற்குப் பதிலடி கொடுக்க முடியாத நிலையில் விஜய் ரசிகர்கள் உள்ளனர். காரணம், அவர்களுக்கே படம் திருப்தியைத் தரவில்லை.
சிம்புதேவன் கவுத்திட்டார்
விஜய் நடிப்பையும், படமாக்கலையும் யாரும் விமர்சித்தது போலத் தெரியவில்லை. ஆனால் அழகாக கொடுத்திருக்க வேண்டிய பேன்டசி கதையை கத்துக்குட்டி போல கையாண்டு விட்டதாக இயக்குநர் சிம்புதேவன் மீதுதான் அதிக விமர்சனம் வந்து விழுகிறது.
எப்படி எடுத்திருக்கனும்
விஜய் கால்ஷீட் கிடைப்பதே கஷ்டம்.. மற்ற நடிகர்களை விட "அதி உயர் பீக்"கில் இருக்கும் நிலையிலும் கூட அதை பொருட்படுத்தாமல் பெருந்தன்மையாக இறங்கி வந்து இந்தப் படத்தில் நடித்ததற்காகவாவது படத்தை பிரமாதமாக எடுத்திருக்க வேண்டாமா என்று சிம்புதேவனை பலரும் விமர்சிக்கிறார்கள்.
தியேட்டர்காரர்கள் பீதியில்
மறுபக்கம் புலி படத்தை வாங்கி திரையிட்டுள்ள திரையரங்க உரிமையாளர்கள் பீதியில் உள்ளனர். அக்டோபர் 1ம் தேதி படம் திரைக்கு வந்தது. அடுத்த 3 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் படம் ஹவுஸ் புல்லாகி விட்டது. ஆனால் இன்று முதல் அது கஷ்டம் என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர்.
கட்டணத்தை ஏற்று
இதனால் தற்போது கட்டணத்தை டபுளாக்கி வசூலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. சேலத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் புலியைப் போட்டுள்ளனர். இங்கு அனைத்திலுமே கட்டணம் அப்படியே டபுளாகி விட்டதாம்.
150 வரை
அதிகபட்சம் ரூ. 150 வரை டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறதாம். அதாவது குறைந்தது 20 முதல் 50 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளனராம். அதேபோல பிளாக்கிலும் தியேட்டர்களே டிக்கெட்டை விற்று அதன் மூலமும் அதிக லாபம் பார்த்து வருகின்றனராம்.
பல ஊர்களிலும்
இங்கு மட்டுமல்லாமல் மேலும் பல ஊர்களிலும் கூட கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாம். இதனால் படம் பார்க்க வருகிற மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்த கிரகத்திற்குப் பேசாமல் திருட்டு விசிடியை வாங்கிப் பார்த்து விடலாமே என்ற எண்ணமே மக்களிடம் அதிகரிக்கிறது.
திருட்டு விசிடி விற்பனையும் அமோகம்
ஏற்கனவே படத்தை ஆன்லைனில் வெளியிட்டு விட்டது ஒரு கும்பல். அதேபோல திருட்டு விசிடியும் படு தாராளமாக விற்பனையில் உள்ளதாம். படத்திற்கு வருகிற கூட்டத்தை விட திருட்டு விசிடி வாங்கும் கூட்டம்தான் அதிகம் இருக்கும் போல. அப்படி பிசியாக விற்று வருகிறதாம் திருட்டு விசிடி புலி.
அடுத்த லிங்கா?
புலி படம் கிட்டத்தட்ட அடுத்த லிங்கா என்று கூறும் அளவுக்கு நிலைமை இருப்பதாகவும் ஒரு தரப்பு கவலையில் உள்ளதாம். இதை சரி செய்ய தேவையானவை குறித்து விஜய் தரப்பும் ஆலோசித்து வருவதாகவும் சொல்கிறார்கள்.