இந்திரா காந்தி படுகொலை பற்றிய திரைப்படத்தை திரையிட முடியாது - சென்சார் போர்டு தடை
டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை மையமாக கொண்டு இயக்கப்பட்ட பஞ்சாபி திரைப்படமானது திரையிடுவதற்கு தகுதியான நிலையில் இல்லை. எனவே அதை திரையிட முடியாது என்று மத்தி சென்சார் போர்டு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இப்படம் இன்று திரையிடப்படவில்லை. முன்னதாக இப்படம் குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தன. இதையடுத்து இப்படத்தை மத்திய உள்துறை, செய்தி ஒளிபரப்புத்துறை மற்றும் சென்சார் போர்டு அதிகாரிகள் கூட்டாக பார்த்தனர். அதன் பின்னர் இப்படத்தைத் திரையிட்டால் வட மாநிலங்களிலும் பிற பகுதிகளிலும் பெரும் மோதல் ஏற்படலாம். எனவே இதைத் திரையிட அனுமதிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

முன்னதாக பஞ்சாப் மாநிலத்தினைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியின் தலைவர்கள் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் இ்ந்தப் படத்திற்கு லஞ்சம் கொடுத்து சென்சார் சான்றிதழ் வாங்கப்ட்டதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து சென்சார் குழுவின் தலைவரான ராகேஷ் குமார், கடந்த திங்களன்று மும்பையில் கைது செய்யப்பட்டார்.
"காம் தே ஹேரே" என்னும் அப்படம் ஆங்கிலத்தில் டைமண்ட் ஆப் தி கம்யூனிட்டி என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தில் 1984 ஆம் ஆண்டு, இந்திரா காந்தியினை சீக்கிய பாதுகாவலர் சுட்டுக் கொன்ற சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திராவைச் சுட்டவர்களைப் புகழ்வது போலவும் இப்படம் அமைந்துள்ளது.
இப்படம் பற்றி இயக்குனர் ரவீந்தர் ரவி, "இப்படத்தில் ஹீரோக்களும் இல்லை, வில்லன்களும் இல்லை" என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இப்படத்திற்கு நிரந்தர தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











