Allu Arjun: அல்லு அர்ஜுன் கைதா? நீதிமன்றத்திற்கு வந்தவரை வாகனத்தில் ஏற்றிய காவல்துறை.. என்ன நடக்குது
ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆகி வசூலில் சக்கை போடு போட்டு வருகின்றது. 6 நாளில் இந்திய அளவில் ரூபாய் 1002 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்து, மேலும் வசூல் குவித்து வருகின்றது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், இன்னொருபுறம், படக்குழுவினருக்கு கவலை அளிக்கும் சம்பவம் படம் ரிலீஸ் செய்யப்பட்ட நாளான டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது. அதாவது டிசம்பர் 5ஆம் தேதி அதிகாலையில், ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் படம் பார்க்க ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர்.
அங்கு ரசிகர்களுடன் படம் பார்க்க அல்லு அர்ஜுன் வந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அல்லு அர்ஜுனை அருகில் பார்த்துவிடவேண்டும் என நெரிசல் அதிகமானது. இதனால் படம் பார்க்க வந்த ரசிகை ரேவதி என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இவருடன் வந்திருந்த அவரது குழந்தையும் கூட்ட நெரிசலில் சிக்கி, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தெலங்கானா காவல்துறை, அல்லு அர்ஜுன் வருவது தொடர்பாக எங்களுக்கு எந்தவிதமான முன் அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என தெரிவித்தது.

அல்லு அர்ஜுன் கைது? : இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வந்த அல்லு அர்ஜுனை, தெலங்கானா காவல்துறையினர், கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இது விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றார்களா? அல்லது கைது செய்யப்பட்டுள்ளாரா என்ற குழப்பம் முதலில் இருந்த நிலையில், அவரை கைது செய்துள்ளதாக, ஹைதராபாத் காவல்துறை ஆணையர், சி.வி. ஆனந்த் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இது அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மத்தியிலும் புஷ்பா 2 படக்குழுவினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











