Allu Arjun: இத்தனை ஆண்டுகள் சிறையா? புஷ்பா கதாநாயகனை ரவுண்டு கட்டிய தெலங்கானா காவல்துறை.. விவரம்!
ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோ காட்சியைப் பார்க்க வந்த ரசிகை ரேவதி என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். ரசிகை ரேவதியின் உயிரிழப்புக்கு காரணம் அல்லு அர்ஜுன் மற்றும் ப்ரீமியர் ஷோ திரையிட்ட சந்தியா திரையரங்க உரிமையாளரும்தான் காரணம் என காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து அல்லு அர்ஜுன் தன்னை விடுவிக்க வேண்டும் என தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்த நிலையில், தெலங்கானா காவல்துறை அவரைக் கைது செய்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டது குறித்து ஹைதராபாத் காவல்துறை ஆணையர் சி.வி. ஆனந்த் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படத்தின் ப்ரீமியர் ஷோ டிசம்பர் 5ஆம் தேதி நள்ளிரவில் ஹைதராபாத்தில் இருக்கும் புகழ்பெற்ற தியேட்டரான சந்தியா தியேட்டரில் திரையிடப்பட்டது. ப்ரீமியர் ஷோவைக் காண ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர். அந்த நேரம்பார்த்து, அல்லு அர்ஜுன் சந்தியா தியேட்டருக்கு முன் அறிவிப்பு எதுவும் இன்றி, படம் பார்க்க வந்தார். இதனால், ரசிகர்கள் ஆரவாரத்தில், அல்லு அர்ஜுன் வந்த காரினை நோக்கி முன்னேறினார்கள்.

இதனால் கூட்ட நெரிசலில், 25 வயதுடைய ரேவதி என்ற ரசிகை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ரேவதியின் மரணத்திற்கு அல்லு அர்ஜுனும் சந்தியா தியேட்டர் ஓனரும்தான் காரணம் என தெலங்கானா காவல்துறை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. அதாவது இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் குற்றப் பத்திரிகையில், அல்லு அர்ஜுன் மற்றும் சந்தியா தியேட்டர் ஓனர் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
வழக்கு பிரிவு: அதில் இவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 105, 118(1) red with 3/5 BNS ஆகிய பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரிவு 105 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைக்காது. அதேபோல் இந்த வழக்கில் அல்லு அர்ஜுன்மீது குற்றம் நீரூபிக்கப்பட்டால், அவருக்கு 5 முதல் 10 ஆண்டுகள் தண்டனைக் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல், பிரிவு 118(1)-ன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்தப் பிரிவின் கீழ் அல்லு அர்ஜுனுக்கு குறைந்த பட்சம் ஒன்று முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
சிறைத் தண்டனை: அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், அவர் தற்போது அழைத்துச் செல்லப்பட்டுள்ள சிக்கட பள்ளி காவல் நிலையத்தைச் சுற்றிலும் அவரது ரசிகர்கள் சூழ்ந்து முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியே பெரும் பரபரப்பிற்கு ஆளாகியுள்ளது. அதேநேரத்தில் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவர் நேரடியாக, ரேவதியின் மரணத்திற்கு காரணம் இல்லை. மேலும் ரேவதியின் மரணம் விபத்துதான் என்றாலும் தவிர்த்திருக்க வேண்டிய ஒன்று. இதனால் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் கிடைக்கவும் வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகின்றது.
எதிர்ப்பும் ஆதரவும்: அல்லு அர்ஜுனுக்கு திரைத்துறையினர் பலரும் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். கூட்ட நெரிசலில் ரசிகை ஒருவர் உயிரிழந்தது வருத்தத்தை ஏற்படுத்தினாலும், அதற்கு அல்லு அர்ஜுன் எந்த வகையில் குற்றவாளி என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அல்லு அர்ஜுனுக்கு பாலிவுட் நடிகர் அருண் தவான் ஆதரவு தெரிவித்துள்ளார். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


Click it and Unblock the Notifications











