அல்லு அர்ஜுன் கைது நடவடிக்கை.. சினிமாவை விட்டே விலக முடிவெடுத்த சுகுமார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை: டோலிவுட்டில் இனிமேல் முன்பு போல சினிமா நடிகர்களுக்கும் சினிமாவில் பணியாற்றுபவர்களுக்கும் சுதந்திரம் இருக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், புஷ்பா படத்தின் இயக்குநர் சுகுமார் சினிமாவை விடப்போவதாக சொல்லியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு வரப்போகிறேன் என சொன்னதும் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி கேரளாவில் உள்ள சிறுவர்கள் கூட அதற்காக கண்ணீர் விட்டு அழுத காட்சிகளை காண முடிந்தது.

புஷ்பா 2 திரைப்படம் 1600 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டையை நடத்தி இதுவரை வெளியான இந்திய சினிமாவிலேயே டாப் 3 இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், அந்த படத்தின் இயக்குநர் சமீபத்தில் நடைபெற்ற கேம் சேஞ்சர் நிகழ்ச்சியில் இப்படி பேசியது ராம்சரண் உள்ளிட்ட சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புஷ்பா 2 வசூல்: மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த புஷ்பா 2 திரைப்படம் இதுவரை 1600 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டையை நடத்தியுள்ளது. இந்தி சினிமாவில் இதுவரை எந்த படமும் நிகழ்த்தாத 700 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் சாதனையையும் புஷ்பா 2 நிகழ்த்தியுள்ளது. பாகுபலி 2 மற்றும் தங்கல் படங்களை தொடர்ந்து அதிக வசூல் பெற்ற 3வது படமாக புஷ்பா 2 உள்ளது.
அல்லு அர்ஜுன் கைது: புஷ்பா 2 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியால் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்து வந்த அல்லு அர்ஜுன் கடந்த டிசம்பர் 13ம் தேதி ரேவதி எனும் பெண் சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் விசாரணைக் காவலில் சிறை செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக அல்லு அர்ஜுன் சிறைக்கு சென்ற நிலையில், அவருக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. மறுநாள் காலையிலேயே சிறையில் இருந்து அல்லு அர்ஜுன் வீடு திரும்பினார்.

முதலமைச்சர் தாக்கு: சட்டசபையிலேயே அல்லு அர்ஜுன் சினிமா தியேட்டருக்கு வந்து படம் பார்த்ததால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மகன் மூளைச்சாவு அடைந்துள்ளான். ஆனால், அல்லு அர்ஜுனுக்கு கை போனதா? கால் போனதா? நல்லாத்தானே இருக்காரு அவரை துக்கம் விசாரிப்பது போல சினிமா பிரபலங்கள் படையெடுத்துச் சென்றது ஏன்? பாதிக்கப்பட்ட குடும்பத்தை ஒரு சினிமாக்காரனாவது போய் பார்த்திருப்பானா? என ரேவந்த் ரெட்டி விளாசினார். மேலும், அர்ஜுன் ரெட்டி விவகாரத்தில் தெலங்கானா போலீஸார் அடுக்கடுக்கான ஆதாரங்களை ரிலீஸ் செய்தும் அல்லு அர்ஜுனை நேற்று மீண்டும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி அவரது பவுன்சர் அந்தோனியை கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சினிமாவை விட்டே போகணும்: இந்நிலையில், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற புஷ்பா 2 படத்தின் இயக்குநர் சுகுமார் அங்கே நீங்கள் எதை விட வேண்டும் என ஆசைப்படுறீங்க என்கிற கேள்விக்கு, "சினிமா" என பதில் அளித்தது அங்கிருந்த ராம்சரண் உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அல்லு அர்ஜுன் கைது நடவடிக்கையை மனதில் வைத்துக் கொண்டு தான் சுகுமார் இப்படி பேசியிருக்கிறார் என சினிமா வட்டாரத்தில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.


Click it and Unblock the Notifications











