Bhavatharini - அவர் அப்படிப்பட்டவர்.. பவதாரிணி கடைசியாக இசையமைத்த படத்தின் இயக்குநர் எமோஷனல்
சென்னை: பாடகி மற்றும் இசையமைப்பாளர் பவதாரிணி கடந்த ஜனவரி 25ஆம் தேதி பித்தப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அவர் கடைசியாக புயலில் ஒரு தோணி என்ற படத்துக்கு இசையமைத்தார். இயக்குநர் ஈசன் என்பவர் இயக்கியிருக்கும் இப்படமானது விரைவில் வெளியாகியிருக்கிறது. இந்தச் சூழலில் பவதாரிணி குறித்து ஈசன் எமோஷனலாக பேசியிருக்கிறார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் வலம் வந்தவர் பவதாரிணி. இளையராஜாவின் மகளான அவர் மொத்தம் 30க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார். 10 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பாரதி படத்தில் இடம்பெற்ற மயில் போல பொண்ணு ஒன்னு பாடலுக்காக தேசிய விருதையும் பெற்றார் அவர். கடைசியாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையையில் அனேகன் படத்தில் இடம்பெற்ற ஆத்தாடி ஆத்தாடி பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்பு: சூழல் இப்படி இருக்க பவதாரிணிக்கு பித்தப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதனையடுத்து இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் சரி வராததால் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த சிகிச்சையும் பலனிக்காததால் கடந்த ஜனவரி 25ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரின் உடல் பண்ணைபுரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது இளையராஜா குடும்பத்தினர் சேர்ந்து பாடல்கள் பாடியது காண்போரை உருக வைத்தது.
புயலில் ஒரு தோணி: இதற்கிடையே பவதாரிணி கடைசியாக புயலில் ஒரு தோணி என்ற படத்துக்கு இசையமைத்தார். படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஈசன் என்பவர் படத்தை இயக்க விஷ்ணு பிரகாஷ், அர்ச்சனா சிங் என்ற புதுமுகங்கள் இதில் ஹீரோ, ஹீரோயின்களாக நடித்திருக்கின்றனர். படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் பவதாரிணி குறித்து படத்தின் இயக்குநர் ஈசன் எமோஷனலாக பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஈசன் பேச்சு: அவர் பவதாரிணி குறித்து பேசுகையில், "பெண்களுக்கு ஒரு ஆதரவு குரலாக புயலில் ஒரு தோணி படம் உருவாகியிருக்கிறது. நான் இந்தக் கதையை தேர்வு செய்வதற்கு முன்னதாகவே பவதாரிணியைத்தான் இசையமைக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். ந்நான் முழு படத்தையும் முடித்த பிறகு பவதாரிணியிடம் அதனை திரையிட்டு காண்பித்தேன். அவருக்கு படம் ரொம்பவே பிடித்துப்போய்விட்டது.
இரண்டு பாடல்கள்: படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள் இருக்கின்றன. அந்த இரண்டு பாடல்களையுக் கவிஞர் சினேகன் எழுதியிருக்கிறார். இரண்டு பாடல்களையும் பவதாரிணி விரைவிலேயே கொடுத்து எங்களை ஆச்சரியப்படுத்தினார். இரண்டு பாடல்களும் எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். ஒரு பாடலை ஜிவி பிரகாஷும், மானசியும் பாடியிருக்கிறார். அதேபோல் கார்த்திக் ராஜாவும் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
பின்னணி இசை: படத்துக்கான பின்னணி இசையை நேர்த்தியாகவும், சிறப்பாகவும் அமைத்திருக்கிறார் பவதாரிணி. படம் வெளியாகும் முன்னரே அவர் இறந்துவிடுவார் என்று நாங்கள் துளியும் நினைத்துப்பார்க்கவில்லை. அவர் இல்லை என்பதை இப்போதும் எங்களால் நம்ப முடியவில்லை. எங்கள் திரைப்படத்தின் மிகப்பெரிய பலமே அவர்தான். பவதாரிணி கிரீடத்தில் இருக்கும் வைரக்கல். எங்கள் திரைப்படத்தின் வெற்றியை அவருக்கு கூடிய விரைவில் அர்ப்பணிப்போம்" என்றார்.


Click it and Unblock the Notifications











