பெண் விலை வெறும் 999’... ஸ்ரீரெட்டியின் கதையா? பரபரப்பை ஏற்படுத்திய பர்ஸ்ட் லுக்!
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை மையமாக வைத்து உருவாகிறது பென் விலை வெறும் 999 எனும் படம்.
சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை மையமாக வைத்து உருவாகி வரும் 'பெண் விலை வெறும் 999' எனும் படம் ஸ்ரீரெட்டியின் கதையா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ரெயின்போ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வரதராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'பெண் விலை வெறும் 999'. சுருக்கமாக 'பிவி999 '.

நவம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கும் இந்த 'பெண் விலை வெறும் 999' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகளிர் அமைப்பினரும் மற்றும் பெண்ணியம் பேசுபவர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த படத்திற்கு எதிராக கருத்துகளை தெரிவித்தனர்.
ஆனால் இது அப்படிப்பட்ட படம் இல்லை என்கிறார் இயக்குனர் வரதராஜ். பெண்களின் கண்ணியத்தை காக்கும் வகையிலும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இப்படம் உருவாகி இருப்பதாக அவர் கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, "பொதுவாக பெண்கள் பிரச்சினையை அணுகுவதாகக் கூறும் படங்கள் வணிக நோக்கில் பெண்களைக் கவர்ச்சியாகக் காட்டுவார்கள். ஆனால் நாட்டில் பற்றி எரியும் பாலியல் கொடுமை பற்றியும் தொழில்நுட்ப வளர்ச்சியால் நிகழும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் குறித்தும் பேசும் இப்படம் கண்ணியமாக துளியும் ஆபாசக் கலப்பின்றி உருவாகியுள்ளது.
சமூகத்தில் ஆணுக்கு நிகரான பங்கு பெண்களுக்கு உண்டு. ஆனால் பெண்களை ஒருபோகப் பொருளாகேவே சமுதாயம் பார்க்கிறது. ஆண்களிடம் பெண்கள் பற்றிய பார்வை மாறியுள்ளது . அவர்களைச் சக மனுஷியாக நினைக்க வேண்டும், மதிக்க வேண்டும், நடத்த வேண்டும் என்பதை இப்படம் கூறுகிறது " என்கிறார் அவர்.

இதற்கிடையில் சமீபத்தில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கும் நடிகை ஶ்ரீரெட்டியின் கதை தான் இது என்றும் கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே ஶ்ரீரெட்டியின் கதை அவர் நடித்து தயாராக உள்ள நிலையில் இப்படமும் அதே கதையாக இருக்குமோ என்கிற பரபரப்பும் நிலவுகிறது.


Click it and Unblock the Notifications











