Karuppu: கருப்பு ரிலீஸ் ஆகல.. திடீரென கண்ணீருடன் வீடியோ போட்ட ஆர்ஜே பாலாஜி.. என்ன ஆச்சு?
சென்னை: சூர்யா, த்ரிஷா, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான கருப்பு படம் மே 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து, ரிலீஸ் வேலைகள் பலவும் சிறப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் சில பல காரணங்களால் படம் மே 14ஆம் தேதி காலையில் வெளியாகவில்லை. படக்குழு தரப்பில் முறையான விளக்கம் கொடுக்கப்படாமல், மன்னிப்பு கேட்கப்பட்டது.

இந்நிலையில் படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில், வெளியிட்டுள்ள வீடியோவில் கண்ணீர் விட்டு அழுது பேசியுள்ளார். அதில் அவர், ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், இது நடந்திருக்க கூடாது. படம் பார்க்க தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என எங்கு நீங்கள் தியேட்டருக்கு காலையில் 9 மணிக்குச் சென்றிருந்தாலும் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
ம்ன்னிப்பு: படம் பார்ப்பதே, நமது வாழ்க்கையில் உள்ள கவலை மறந்து போகத்தான், அப்படி இருக்கும்போது, அப்படியான படம் பார்ப்பதே மிகவும் சவாலானதாக மாறிப்போனதற்கும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நானும் இதை எதிர்பார்க்கவில்லை. மே 14ஆம் தேதி கருப்பு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெறும் என்று நான் பலமுறை யோசித்து இருக்கிறேன்.
சூர்யா: மேலும் படம் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கிறேன். கடவுள் இந்த படத்திற்கு உள்ள எல்லா பிரச்னைகளையும் சரி செய்து கொடுப்பார். அனைவரும் படம் வெளியாவதற்கு வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். பல தடைகளைக் கடந்துதான் படம் வெளியாகிறது, சூர்யா சார் இந்த படத்திற்காக நிறைய கொடுத்துவிட்டார். இந்த படம் கட்டாயம் வெளியாகும். படம் இன்று மாலை வரும், படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.
வழி மறிக்காதே: கருப்பன் வரான் வழி மறிக்காதே என்கிறேன், ஆனால் பலரும் வழி மறித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவற்றை எல்லாம் கடந்து படம் வெளியாகும். படம் நன்றாக இருக்கும், உங்களுக்குப் பிடிக்கும் என்று அழுது கொண்டே பேசிய வீடியோவைப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சூர்யா ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. மேலும் பலர், ஆர்.ஜே. பாலாஜிக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications