எதிர்பார்த்ததைவிடவும் பெரிய வெற்றி.. கருப்பு பற்றி ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சி
கோவை: சூர்யா, திரிஷா உள்ளிட்டோரை வைத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கும் கருப்பு திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. படம் வெளியாகி ஒருவாரம் நிறைவடைந்திருக்கிறது. இதுவரை மொத்தம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது. இந்நிலையில் கருப்பு படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இன்று கோவையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
கங்குவா, ரெட்ரோ ஆகிய இரண்டு படங்களின் தோல்வி சூர்யாவையும், அவரது ரசிகர்களையும் நிலைகுலைய செய்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் கங்குவா படத்துக்கு படக்குழு கொடுத்த ஹைப்புக்கும் படத்தில் இருந்த விஷயங்களுக்கும் துளிகூட தொடர்பில்லாததால் அந்தப் படத்தை அடித்து காய போட்டுவிட்டார்கள் ரசிகர்கள். அதுமாதிரி ஒரு ஹைப்பை இனிமேல் எந்தப் படமும் செய்யக்கூடாது என்பதற்கு கங்குவாதான் பெரிய உதாரணமாக இருக்கிறது.

ஆர்.ஜே. பாலாஜியுடன் கருப்பு: ஒரு தியேட்டரிக்கல் ஹிட் கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என அனைவருமே ஆவலோடு எதிர்பார்த்தார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் கமிட்டானார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க; சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தது நினைவுகூரத்தக்கது. மே 15ஆம் தேதி படமானது தியேட்டர்களில் ஓரளவுக்கு எதிர்பார்ப்புடன் வெளியானது.
படம் சூப்பர் டூப்பர் ஹிட்: படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். அதுவும் சூர்யாவின் ரசிகர்களோ உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இப்படி ஒரு ஹிட்டைத்தான் இத்தனை வருடங்களாக எதிர்பார்த்திருந்தோ என ஆனந்த கண்ணீரும் வடித்தார்கள். நேற்றுடன் படம் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்திருக்கிறது. இதுவரை மொத்தம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. இந்நிலையில் கோவையில் இன்று படத்தின் இயக்குநர் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
பாலாஜி பேச்சு: அவர் அப்போது, " தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தியேட்டராக சென்று மக்களை சந்தித்து நன்றி தெரிவித்துவருகிறோம். இந்தப் படத்தை என்னுடன் சேர்ந்து எழுதியவர்களும் உடன் வந்திருக்கிறார்கள்.கோவையிலிருந்து தொடங்கியிருக்கிறோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிடவும் இந்தப் படத்தை கடவுள் பெரிய வெற்றியாக்கியிருக்கிறார். நிறைய பேர் மூன்றாவது தடவை, நான்காவது தடவை பார்ப்பதாக கூறினார்கள். எனவே மக்களை சந்திப்பது ஒரு ட்யூட்டி. இது மக்களுக்காக மட்டுமே எடுக்கப்பட்டது.
அதை செய்கிறார்கள்: நிறைய பேர் படத்தின் இடைவேளை, க்ளைமேக்ஸ் காட்சிகளை எல்லாம் வீடியோ எடுத்து போடுகிறார்கள். இருந்தாலும் ரசிகர்களோ, பரவாயில்லை நாங்களும் சென்று பார்க்கிறோம் என செல்கிறார்கள். அனைவருமே இந்தக் கொண்டாட்டத்தில் ஒரு பங்காக இருக்கிறார்கல். இந்த அன்பால் நாங்கள் நிறைய ஹேப்பியாக இருக்கிறோம். போய் இந்தப் படத்தை நிறைய தடவை பாருங்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications
