CM விஜய் அரசியலிலும் ஆக்ஷன் ஹீரோ தான்.. ரஜினி பட இயக்குநர் பாராட்டு மழை!
சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பதவியேற்றதில் இருந்து, திரையுலகினர் பலரும் அவரது நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் மூத்த இயக்குநர்களில் ஒருவரான ஆர்.வி. உதயகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அரசியலை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட அரசியல் தான் தீர்மானிக்கிறது என்றாலும், அவர்களுக்கு எல்லாம் திரைத்துறையுடன் ஏதாவது தொடர்பு இருந்து கொண்டே இருந்தது, அது இப்போதும் முதலமைச்சர் விஜய் மூலம் தொடர்கிறது. இதில் சினிமாவுக்குச் சம்மந்தமில்லாத திராவிடக் கட்சி முதலமைச்சர்கள் என்றால் அது அதிமுக சார்பில் முதலமைச்சராக பதவி வகித்த, ஒ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி கே பழனிசாமி என இருவர் மட்டும் தான். மற்றபடி பேரறிஞர் அண்ணா தொடங்கி, கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், ஜோசப் விஜய் என அனைவரும் தமிழ் சினிமாவில் அங்கம் வகித்தவர்கள் தான்.

இப்படி இருக்கையில் , தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதில் இருந்து பெரும்பாலும் திரையுலகில் இருந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறர்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நேரில் சென்றும் வாழ்த்தி வந்தனர்.

பாராட்டு மழை: இப்படி இருக்கையில் அதிமுக ஆதரவாளரும் மூத்த இயக்குநருமான ஆர்.வி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்திக்கையில் முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டி உள்ளார். அவர் கூறுகையில், " முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்தே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் வந்ததுமே, பெரிய பெரிய தொழில் நிறுவனத் தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார். மிகவும் முக்கியமான தேவையற்ற இடங்களில் உள்ள மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். அம்மா உணவகங்களை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
ஆக்ஷன் ஹீரோ: இவற்றை எல்லாம் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் உள்ளது. விஜய் ஆக்ஷன் ஹீரோ என்பதை இதிலும் நிரூபித்துவிட்டார்" என்று பாராட்டி உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக சின்னக் கவுண்டர், எஜமான் போன்ற படங்களை இயக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications