Maamannan - மாமன்னன் சர்ச்சை.. சின்னக்கவுண்டர்லாம் சாதி படம் இல்லைங்க.. இயக்குநரின் புது விளக்கம்
சென்னை: R.V.Udhayakumar (ஆர்.வி.உதயகுமார்)சின்னக்கவுண்டர், எஜமான் படங்கள் சாதி படங்கள் இல்லை என இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்டவர்களின் வலியும், குரலும் இப்போதுதான் பதிவு செய்யப்பட ஆரம்பித்திருக்கின்றனர். வெற்றிமாறன், பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் அதனை தங்களது ஒவ்வொரு படத்திலும் எந்த சமரசமும் செய்யாமல் தொடர்ந்து செய்துவருகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துகளும், பாராட்டுக்களும் கிடைத்துவருகின்றனர்.

விமர்சனம்: அதேசமயம் பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் மீது கடுமையான விமர்சனமும் எழுந்துவருகிறது. திரைப்படங்களில் சாதியை புகுத்துகிறார்கள். இந்தக் காலத்தில் யாரும் சாதி பார்க்காதபோது இவர்கள் திரைப்படங்கள் மூலம் பிரிவினையை உண்டாக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர் ஒருதரப்பினர். சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்துக்கும் இதுமாதிரியான குற்றச்சாட்டுக்களை கேட்க முடிந்தது.
அப்போது மட்டும் ஏன் வந்தது?: இப்படி ஒரு தரப்பினர் வாதத்தை முன்வைக்க மறுதரப்பினரோ 90களில்தான் தேவர் மகன், சின்னக்கவுண்டர் என பெயரிலேயே சாதியை தாங்கி படங்கள் வெளியாகின. அதேபோல் எஜமான் உள்ளிட்ட படங்களில் ஆதிக்க சாதியினராக கருதப்படுபவர்கள் ஒடுக்கப்பட்டவர்களை அடிமையாக நடத்தும் காட்சிகள் இருக்கின்றன. எனவே அப்போதுதான் சினிமாவுக்குள் சாதி இருந்தது. இப்போது இல்லை எனவும் கூறுகின்றனர்.
ஆர்.வி.உதயகுமார் பேட்டி: இந்நிலையில் சின்னக்கவுண்டர், எஜமான் உள்ளிட்ட படங்களின் இயக்குநரான ஆர்.வி.உதயகுமார் இதுகுறித்து பேசுகையில், "சாதியை வைத்து அரசியல் பண்ண வேண்டாம். அரசியல்வாதிகள் சாதியை வைத்து அரசியல் பண்ணுகின்றனர். அரசியல் தலைவர்களும் சாதியை வைத்து அரசியல் செய்கின்றனர். சினிமாவில் சாதி கிடையாது. எங்க ஊரில் சின்ன கவுண்டர் இருந்தார். அவரைப் பத்தி படம் எடுத்தோம். அதனால் கவுண்டர்கள் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்பது அல்ல.

காலடியை பின்பற்றுதல்: கடவுளைப் பார்த்தால் விபூதி எடுத்து பூசி கொள்கிறீர்கள். வாழும் கடவுளின் விபூதியை எடுத்து பூசி கொள்கிறேன் அவ்வளவுதான். ஒரு சிறந்த மனிதனின் காலடியை பின்பற்றுதல் என்ன தவறு. நான் காந்தியை வழிபடுகிறேன். எங்க ஊரில் ஒரு காந்தி இருக்கான் அவனை கும்பிடுகிறேன். இதில் என்ன தவறு. இல்லாத விஷயத்தை சொல்லவில்லை. கதையா பாருங்க. கருத்த பாருங்க. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் வேதனையை வெளிப்படுத்தும் வசனங்கள் உள்ளது.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் கவுண்டர் வீட்டில் போய் பொண்ணு கேட்டதால், அதில் அடித்ததால் கதாநாயகனின் அம்மா இறந்து விடுகிறார். அந்த படத்தின் வசனத்தில் கார்த்திக் ஒரு டயலாக் பேசுவார். நீ என்னையா பெரிய மேல்படி மேல்படி. என் ஆத்தாவ கொன்னுட்டீங்க. உன் சாதியை வைத்து என் ஆத்தா உயிரை திருப்பி கொடுக்க முடியுமா என கார்த்திக் கேட்பார். அந்த வசனத்தையும் நான் தான் எடுத்தேன்.
மாமன்னனை பார்க்கலாமா? வேண்டாமா?: என்னுடன் படித்தவர்கள் எல்லா சமுதாயத்தினரும் என்னுடன் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது யார் என்ன சாதி என்று தெரியாது இன்னைக்கு தெரியப்படுத்துகின்றனர். மாமன்னன் படம் இன்னும் பார்க்கவில்லை. மாமன்னன் படத்தை எல்லாம் சொல்வதைப் பார்த்தால் பார்க்கலாமா வேண்டாமா என்று உள்ளது" என்றார்.


Click it and Unblock the Notifications











