இன்னைக்கு ஒரு புடி.. பிரியாணி விருந்து கொடுத்த தனுஷ்.. அடுத்த படத்துக்காக எப்படி மாறிட்டாரு பாருங்க!
சென்னை: தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தினை தானே கதை திரைக்கதை அமைத்து இயக்கி நடித்தும் உள்ளார். ராயன் கடந்த ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ராயன் படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததால், நடிகர் தனுஷ் பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் ஒரு படம் ஹிட் ஆகிவிட்டால் பிரியாணி விருந்து கொடுப்பது என்பது ஒரு வாடிக்கையாக மாறிவிட்டது.
படம் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளால் நிரம்பி இருக்கும் பல ஹாலிவுட் படங்களைப் போல் இருக்கின்றது என பலர் கூறினர். படம் முழுவதும் கொலை, வெட்டு, குத்து என இருப்பதால் படத்திற்கு சென்சார் போர்டு நிறுவனம் ஏ சர்டிஃபிகேட் வழங்கியது. படத்தின் முதல் பாதி மற்றும் இடைவேளை காட்சி ஆகியவை ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்துள்ளது. அதேபோல், இரண்டாம் பாதி கொஞ்சம் விறுவிறுப்பு குறைவாக இருந்தாலும் படம் பார்ப்பவர்களுக்கு விஷுவல் ட்ரீட் கொடுத்து மிரளவைத்துள்ளார் தனுஷ். இதுமட்டும் இல்லாமல், படத்தின் பெரும்பாலான காட்சிகள் இருட்டிலேயும் இரவிலேயுமே காட்சி படுத்தப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு ஒரு ஹாலிவுட் படம் பார்த்த எண்ணத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது என பல விமர்சகர்கள் கூறியிருந்தனர்.

வசூல் விபரம்: முதல் நாளில் படம் அனைத்து மொழிகளிலும் இந்தியாவில், ரூபாய் 13.65 கோடிகளும், இரண்டாம் நாளில் ரூபாய் 13.75 கோடிகளும் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியானது. அதேபோல் மூன்றாவது நாளில் ரூபாய் 15.25 கோடிகளும் வசூல் செய்தது. வார நாட்களில் படத்தின் வசூல் குறைந்தது. ஆனால் ராயன் படம் இதுவரை ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. இதுவே படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்காரில் திரைக்கதை: இந்நிலையில் படத்தின் திரைக்கதை புத்தகத்தினை ஆஸ்கர் விருதினை வழக்கும் அகாடமி நிறுவனமான அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் ராயன் படத்தின் திரைக்கதை புத்தகத்தை வைக்க தேர்வாகியுள்ளது. இந்த தகவலை ராயன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்தது. படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்திமான துரை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சரவணன். இவர் நடிகர் தனுஷ் குறித்து கூறும்போது, நடிகர் தனுஷ் மிகவும் ஜாலியான மனிதன். ஆனால் இயக்குநர் தனுஷ் பேய் மாதிரி வேலை பார்ப்பார். அவரிடம் ஜாலியாக பேசுவது என்பது மிகவும் சிரமம் எனக் கூறியிருந்தார்.

நன்றி வீடியோ: இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான "போகுற வழி தெரியலயே யார் தந்த விதியோ" பாடலை ஏ.ஆர். ரகுமான் பியானோவில் அமர்ந்து இசைத்துக் கொண்டே பாடுகின்றார். அவருடன் அருகில் நிற்கும் தனுஷ்ஷும் அந்த பாடலைப் பாடுகின்றார். படத்தினை மாபெரும் வெற்றிப்படமாக மாற்றிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இந்த பாடலை பாடி , படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை சன் பிக்சர்ஸ் மற்றும் தனுஷ் இணைந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

பிரியாணி விருந்து: மேலும் அந்த வீடியோவுக்கு எங்களிடமிருந்து உங்களுக்கு மில்லியன் நன்றிகள் என கேப்ஷன் இடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் நடிகர் தனுஷ் ராயன் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படத்தில் நடித்தவர்கள், ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பிரியாணி விருந்து போட்டு அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக உலா வருகின்றது.



Click it and Unblock the Notifications











