அரசியலுக்கு வந்தா இப்படித்தான் ஆகும்.. விஜய் மீது குவிந்த விமர்சனத்துக்கு ராதாரவி பளிச் பதில்!
சென்னை: அறிமுக இயக்குநர் நவீன் குமார் இயக்கத்தில் ராதா ரவி கதையின் நாயகனாக நடித்துள்ள 'கடைசி தோட்டா' திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய ராதா ரவி விஜய் குறித்தும் அவருக்கு எதிரான அரசியல் விமர்சனங்கள் குறித்தும் பேசியுள்ளார்.
ராதா ரவி, வனிதா விஜயகுமார் மற்றும் ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் 'கடைசி தோட்டா' திரைப்படம் உருவாகி உள்ளது. விரைவில் அந்த படம் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. அந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில், படம் குறித்தும் நான் நடிக்க வந்து 50 ஆண்டுகள் ஆனது குறித்தும் ராதா ரவி பேசியுள்ளார்.

சினிமா மற்றும் அரசியல் என அசத்தி வந்த ராதா ரவி சமீப காலமாக அரசியலில் இருந்து விலகி விட்டதாகவும், ஆனாலும் அரசியல் கருத்துக்களை தொடர்ந்து பேசுவேன் என்றும் கூறியுள்ளார்.
கடைசி தோட்டா: அறிமுக இயக்குநர் நவீன் குமார் இயக்கத்தில் ராதா ரவி நடித்துள்ள 'கடைசி தோட்டா' திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் அந்த கதைக்கு தேவையான காட்சிகளுடன் உருவாகி இருப்பதாக ராதா ரவி கூறியுள்ளார். சாமிநாதன் இந்தப் படத்துக்கு இசையமைத்து உள்ளார். மோகன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
50 வருட சினிமா: நடிகவேள் எம்.ஆர். ராதாவின் மகனான ராதா ரவி ஆரம்பத்தில் கன்னட படத்தில் நடிக்கும் போது தனக்கு ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் அதன் பின்னர் தற்போது தனக்கு கிடைக்கும் சம்பளத்தை பார்த்து தானே வியந்து உள்ளதாகவும் சினிமா மற்றும் அரசியலில் இத்தனை ஆண்டுகளில் பொது அறிவு நன்றாக வளர்த்துக் கொண்டேன், அதைவிட நிறைய கெட்ட பெயர்களையும் வாங்கியுள்ளேன் என்றும் கூறினார்.

விஜய் மீதான விமர்சனம்: கல்வி விருது விழா நிகழ்ச்சியில் முதலில் நடிகர் விஜய் பேசிய போது திமுக தரப்பினர் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தனர். அதன் பின்னர் நீட் தேர்வுக்கு எதிராக விஜய் பேசிய நிலையில், திமுகவினர் ஆதரவு தெரிவித்தனர். விஜய் திமுகவிடம் சரண்டர் ஆகி விட்டார் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அரசியலுக்கு வந்து விட்டால் இப்படித்தான் மாற்றி மாற்றி பேசுவார்கள், அதையெல்லாம் தாண்டி வர வேண்டும் என ராதா ரவி கூறியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் நல்ல நண்பர்: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டதா? நேற்று பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவரது மரணம் ரொம்பவே வேதனையளிக்கிறது. அவர் நல்ல நண்பர், நல்ல மனிதர், ஒருமுறை அவரை சந்தித்து பேசியிருக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











