விஜய்யின் அரசியல் மாநாடு பேச்சு.. பாஜகவை எதிர்க்க யோசிப்பார்.. ராதிகா என்ன சொல்லிருக்காரு பாருங்க
சென்னை: விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு சில நாட்களுக்கு முன்பு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கைகள், வழிகாட்டிகள் உள்ளிட்டவைகளை பற்றி பேசிய அவர்; தமிழ்நாட்டை ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து அரசியல் தளத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சூழல் இப்படி இருக்க விஜய்யின் பேச்சு குறித்து ராதிகா சில விஷயங்களை கூறியிருக்கிறார்.
விஜய்தான் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் தலைப்பு செய்தியாக இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியிருக்கும் அவர் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காணவிருக்கிறார். சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் போல் அரசியலிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்திட வேண்டுமென நினைக்கிறார். ஆனால் அந்தத் தாக்கம் வருமா என்பதை காலம்தான் மக்களுக்கு காட்டி கொடுக்கும். சூழல் இப்படி இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார்.

அலைமோதிய கூட்டம்: விஜய்க்கென்று தமிழ்நாடு முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே தங்களது தளபதி கூட்டியிருந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லட்சோப லட்சம் பேர் விக்கிரவாண்டியில் குழுமி திகைக்க வைத்தனர். அதனைப் பார்த்த பலரும் இவ்வளவு கூட்டமா என்று வாயை பிளந்தனர். அதேசமயம் மாநாட்டுக்கு வந்த கூட்டம் வாக்குகளாக மாறி விஜய்யை தமிழ்நாடு அரசியலில் பெரும் சக்தியாக உருவாக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
விஜய்யின் பேச்சு: மாநாட்டில் விஜய் பேசுகையில், 'பிளவுவாத சக்திகளும், ஊழல் சக்திகளும் நமது முதல் எதிரி. அவர்களை பாசிசம் என்று இங்கிருப்பவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா’ என்று கேள்வி எழுப்பினார். மேலும் எனது கரியர் உச்சத்தில் இருக்கும்போது அரசியலுக்கு வந்திருக்கிறேன். எனக்கு எதை கண்டும் பயம் இல்லை. கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்றெல்லாம் பேசினார். ஆனால் திராவிட மாடலை அவர் கிண்டல் செய்ததால் அவரது பேச்சுக்கு கண்டனங்களும் வலுத்திருக்கின்றன.
ராதிகா பேட்டி: இந்நிலையில் மாநாட்டில் விஜய் பேசியது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ராதிகா, “விஜய் தனியாக கட்சி ஆரம்பித்திருப்பதற்கு என்னுடைய மனதார வாழ்த்துகள். அனைவருமே மக்களுக்கு நன்மை செய்யவே அரசியலுக்கு வருகிறார்கள். அதை அவர்களுடைய கொள்கைகளுக்கேற்ப செய்வார்கள். .தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நட்சத்திரமாக திகழ்ந்துவரும் அவர் அரசியலுக்கு வந்தது மிகச்சிறந்த முடிவுதான். அவரின் அந்த முடிவு எனக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது.
அப்போதிருந்தே தெரியும்: சிறு வயதிலிருந்தே எனக்கு விஜய்யை நன்றாக தெரியும். அவருடைய தந்தையின் இயக்கத்தில் நான் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். அதனால் அவரது இந்த முடிவு எனக்கு மகிழ்ச்சி. விஜய் யோசித்துதான் பேசுவார். அப்படித்தான் திமுகவை நேரடியாக எதிர்த்திருக்கிறார். அதேசமயம் பாஜகவை எதிர்த்து பேசுவதற்கு முன்பு கட்டாயம் அவர் யோசித்துதான் பேசுவார். அதிமுகவை பற்றி ஏன் அவர் பேசவில்லை என்பது தெரியவில்லை. அரசியலை அவர் வேறு விதமாக பார்க்கிறார். தெறி படத்தில் அவருடன் இணைந்து நடித்திருக்கிறேன். அவர் பொதுவெளியில் பெரிதாக பேசமாட்டார். ஆனால் மாநாட்டு மேடையில் அவர் ஆக்ரோஷமாக பேசியதை பார்த்து விஜய் வேறு மாதிரி தெரிந்தார்” என்றார்.


Click it and Unblock the Notifications











