15 அடி உயரம்.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ராகவேந்திரர் சிலை இதுதான்.. கனவை நனவாக்கிய லாரன்ஸ்!
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் நிருவியுள்ள 15 அடி உயர ராகவேந்திர சாமி சிலை தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய ராகவேந்திர சாமி சிலையாம்.
நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
ராகவேந்திரர் சாமியின் பக்தனான அவர் வியாழக் கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் 15 அடி உயர ராகவேந்திரர் சிலையை நிருவியுள்ள அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

ராகவேந்திரர் பக்தன்
லாரன்ஸ் எனும் பெயரையே ராகவேந்திரர் சாமி மீது கொண்ட பக்தியின் காரணமாக ராகவா லாரன்ஸ் என மாற்றிக் கொண்டார் நடிகர் ராகவா லாரன்ஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்நிலையில், ராகவேந்திரர் சாமிக்கு மிகப்பெரிய பளிங்கு சிலையை அவர் உருவாக்கி உள்ளது ரசிகர்களை பரவசமடைய செய்துள்ளது.

15 அடி உயர சிலை
இந்தியாவிலேயே மிகப்பெரிய ராகவேந்திரர் சாமி சிலையை நிருவ வேண்டும் என்கிற நீண்ட நாள் லட்சியத்தை சாதித்துக் காட்டியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். சுமார் 15 அடி உயர பளிங்கு ராகவேந்திரர் சாமி சிலையை நிருவி அதன் அருகே பூஜை செய்தபடி அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

கனவு நனவானது
ஒரு நடிகனாக தான் இந்த அளவுக்கு உயர முழு காரணமே ராகவேந்திரர் சாமியின் அருள் தான். இந்தியாவிலேயே மிகப் பெரிய ராகவேந்திரர் சாமி சிலையை நிருவ வேண்டும் என்கிற தனது நீண்ட நாள் கனவு இன்று நனவானது என நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

45வது பிறந்தநாள்
1976ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி பிறந்த நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது பிறந்தநாளை முன்னிட்டு ராகவேந்திரருக்கு உகந்த நாளான நேற்றே 15 அடி உயர பளிங்கு சிலையை ராகவா லாரன்ஸ் நிருவி ராகவேந்திரர் ஆசியை பெற்றுள்ளார். ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் ராகவா லாரன்ஸுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஏகப்பட்ட படங்கள்
நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா சீரிஸ் படங்கள் மூலம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது அதிகாரம், ருத்ரன், சந்திரமுகி 2 என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி ராகவா லாரன்ஸின் ருத்ரன் படம் திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











