நடிகர் ராகவா லாரன்ஸ் ஆசை.. நவம்பரில் ஆன்மிக அரசியலா..? அதிரடியாக மறுத்த ரஜினிகாந்த் தரப்பு!
சென்னை: ராகவா லாரன்ஸின் ஃபேஸ்புக் பதிவை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நவம்பரில் கட்சி தொடங்க இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
Recommended Video
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று இரவு ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் அரசியலுக்கு வருவது பற்றி கூறியுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

அரசியலுக்கு வரவா?
முக்கியமான விஷயம் பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன். கடந்த மாதம், அரசியலுக்கு வராமலும் சேவை செய்யலாம் என்று கூறியிருந்தேன். நான் சமூகப் பணிகளைச் செய்வதால் என் நண்பர்கள், ரசிகர்கள், அரசியல்வாதிகள், அரசியலுக்கு வருவதற்காகத்தான் இதை செய்கிறீர்களா என கேட்டனர். இன்னும் சிலர், அரசியலுக்கு வந்தால் இன்னும் அதிகமாகச் சேவை முடியும் என்றனர்.

அறுவை சிகிச்சை
குறிப்பாக கொரோனா நேரத்தில் செய்த பணிகளுக்குப் பிறகு இந்த நெருக்கடி அதிகரித்துவிட்டது. என் வீட்டில் குழந்தைகள் காப்பகம் ஆரம்பித்து என் சேவையைத் தொடங்கினேன். உதவி தேவைப்படும்போது எல்லாம் அரசிடம் கேட்டிருக்கிறேன். கலைஞர் ஐயா, ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் இதய அறுவை சிகிச்சைகளுக்கு உதவியுள்ளனர்.

அரசியலுக்கு சென்றால்
ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரும் எனக்கு ஆதரவு அளித்துள்ளனர். அரசியலுக்கு சென்றால் இன்னும் அதிகம் சேவை செய்யலாம் என்பது தெரியும். ஆனால், அரசியலுக்கு வந்தால் மற்றவர்களைப் பற்றித் தவறாகப் பேச வேண்டும் என்ற நிலை இருக்கிறது. எனக்கு அது பிடிக்காது. ஏனென்றால் அனைவரையும் மதிக்கிறேன்.

ரஜினியால் மட்டுமே
இதைதான் என் அம்மாவும் கூறுகிறார். யாராவது ஒரு கட்சி ஆரம்பித்து யாரையும் தவறாகப் பேசி புண்படுத்தாத நிலை வந்தால் அவர்களுடன் இணைந்து என் பங்களிப்பைச் செய்வேன். இந்தியாவில் அப்படி ஒரு கட்சியை ஆரம்பிக்க, ரஜினிகாந்தால் மட்டுமே முடியும் என்று நம்புகிறேன். அரசியல் காரணங்களுக்காகக் கூட அவர் யாரையும் காயப்படுத்த மாட்டார்.

சேவையே கடவுள்
அவர் ஆன்மிக அரசியலை ஆரம்பித்ததும் அவரது ரசிகர்களில் ஒருவனாக, எந்த எதிர்பார்ப்பும் இன்றி சேவை செய்வேன். சேவையே கடவுள். நவம்பர்?". இவ்வாறு லாரன்ஸ் கூறியுள்ளார். இதில் நவம்பர் என்று கேள்விக்குறியுடன் லாரன்ஸ் முடித்திருப்பதால், ரஜினிகாந்த் நவம்பர் மாதம் கட்சி தொடங்க உள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

நம்ப வேண்டாம்
ஆனால், மக்கள் எழுச்சி வந்தபிறகே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சித் தொடங்கும் தேதியை ரஜினிகாந்த் முடிவு செய்யவில்லை என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி தொடர்பான அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடும் வரையில் வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











