நயன்தாரா ஆடுனா மட்டும் பார்க்கிறாங்க.. இவங்களையும் பார்க்கட்டும்.. லாரன்ஸ் அதிரடி பேச்சு
சென்னை: தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் லாரன்ஸ். பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த அவர் கடைசியாக ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் லாரன்ஸின் நடிப்பும் அட்டகாசமாகவே இருந்தது. இதற்கிடையே லாரன்ஸ் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். அது பலரிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் நிகழ்வு ஒன்றில் பேசிய பேச்சு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
டான்ஸராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர் லாரன்ஸ். சூப்பர் சுப்பராயனிடம் பணியாற்றிக்கொண்டிருந்த லாரன்ஸின் நடன திறமையை பார்த்து ரஜினிகாந்த் அவரை நடன பள்ளியில் சேர்த்துவிட்டார். அதனையடுத்து பல பாடல்களில் க்ரூப் டான்ஸராக நடனத்தில் பின்னியெடுத்தார் லாரன்ஸ். சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் படத்தின் மூலம் நடன அமைப்பாளராகும் வாய்ப்பு லாரன்ஸுக்கு கிடைக்க அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார் அவர்.

நடிகர், இயக்குநர்: இதனையடுத்து பல படங்களில் நடன அமைப்பாளராக மாஸ் காட்டினார். அதுமட்டுமின்றி அமர்க்களம், திருமலை உள்ளிட்ட படங்களின் பாடல்களில் தோன்றி நடனம் ஆடிய லாரன்ஸ் அற்புதம் படம் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். தொடர்ந்து 2004ஆம் ஆண்டு மாஸ் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழில் முனி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனையடுத்து காஞ்சனா சீரிஸை இயக்கிய அவருக்கு காஞ்சனாவும், காஞ்சனா 2வும் மெகா ஹிட்டை கொடுத்தது. கடைசியாக அவரது நடிப்பில் ஜிகர்தண்டா 2 வெளியானது. அடுத்ததாக பென்ஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.
உதவி: லாரன்ஸ் நடிப்போடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். பல சிறுவர்களின் படிப்புக்கு ஃபீஸ் கட்டுவது, பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்துவருவது என பலரது பாராட்டை பெற்றிருக்கிறார். சிறுவயது முதல் தான் படிக்க வைத்து இப்போது டிகிரி முடித்திருக்கும் இளைஞரை அறிமுகப்படுத்தி சமீபத்தில்கூட வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத் திறனாளிகள் மல்லர் கம்பம்: இந்தச் சூழலில் உடல் வலு கொண்டவர்கள் மட்டும் பங்கேற்கும் மல்லர் கம்பம் சாகச நிகழ்வில் ராகவா லாரன்ஸின் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்று மல்லர் கம்பம் சாகச நிகழ்வை செய்தார்கள். இந்த நிகழ்வு சென்னையில் நேற்று நடைபெற்றது. அதனையடுத்து பேசிய லாரன்ஸ், "எனக்கு ஊக்கம் தருவதே மாற்றுத்திறனாளிகள்தான். நான் எப்போது தளர்வாக இருந்தாலும் அவர்களை ஆட வைத்து பார்ப்பேன். அப்போது எனக்கு ஊக்கம் தானாகவே வந்துவிடும்.
நயன்தாரா ஆடுனா மட்டும் பார்க்கிறார்கள்: நடிகை நயன்தாரா எத்தனை முறை ஆடினாலும் பார்க்கிறார்களே அதுபோல் நமது படங்களையும் பார்க்கட்டும், இவர்களையும் பார்க்கட்டும். சில காலமாக அவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கிறதே என்று கவலைப்பட்டேன். அப்போதுதான் மல்லர் கம்பம் என்ற ஒன்றை கற்றுக்கொள்கிறோம் மாஸ்டர் என்று சொன்னார்கள். உங்களால் முடியுமா என்று கேட்டேன். எங்களால் முடியும் என்றார்கள். அவர்கள் கற்றுக்கொண்டு செய்வதை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இதன் மூலம் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











