அம்மாவை பாட வைத்து அழகு பார்த்த ராகவா லாரன்ஸ்...அன்னையர் தினத்தில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு!
அன்னையர் தினத்தையொட்டி நடிகர் ராகவா லாரன்ஸ் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை: அன்னையர் தினத்தையொட்டி பாடல் ஒன்றை வெளியிட்ட நடிகர் ராகவா லாரன்ஸ், தனது தாயை மேடையில் பாட வைத்து அழகு பார்த்தார்.
நடன இயக்குனராக இருந்து நடிகராக உயர்ந்து, தற்போது இயக்குனராகவும் வெற்றிப் பெற்றிருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் சமூக சேவைகளிலும் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்.

தனது தாய்க்கு கோயில் ஒன்றையும் லாரன்ஸ் கட்டியிருக்கிறார். இந்நிலையில், அன்னையர் தினத்தையொட்டி, தாய்மையை போற்றும் பாடல் ஒன்றை ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார்.
இதன் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நேற்று நடைபெற்றது. அப்போது தனது தாயை அவர் மேடையில் கவுரவித்தார்.
தாயாரின் ஆசைப்படி அவரை மேடையில் பாட வைத்து அழகு பார்த்தார் லாரன்ஸ். அடுத்தப்படத்தில் தனது தாயை நிச்சயம் பாட வைப்பேன் என அப்போது அவர் உறுதியளித்தார்.
மேலும் தற்போது தாய் என்கிற அமைப்பை அவர் துவங்கியுள்ளார். தங்கள் பெற்றோரரை யாரும் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது எனும் நல்லெண்ணத்தில் இந்த அமைப்பை உருவாக்கியிருப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். அவரது இந்த செயல் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.


Click it and Unblock the Notifications











