அரசியல் சாக்கடை.. அம்மா தடுத்தாங்க.. ஆனா விஜய் அதை மாத்திட்டாரு..ராகவா லாரன்ஸ் ஓபன் டாக்!
சென்னை: தமிழகத்தில் தற்போதைய ஹாட் டாபிக்கே திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தான். இந்தத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ராகவா லாரன்ஸ் இன்று காலை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் 10 நிமிட உணர்ச்சிப்பூர்வமான வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது அரசியல் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.
அரசியல் சாக்கடை: அந்த வீடியோவில், பேசிய லாரன்ஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருகிறார் என்று தெரிந்த உடனே, நானும் அரசியலுக்கு வருகிறேன் என ட்வீட் போட்டுவிட்டு நேராக வீட்டுக்கு சென்று என் அம்மாவிடம் சொன்னேன். ஆனால், என் அம்மாவுக்கு நான் அரசியலுக்கு வருவதில் கொஞ்சமும் விருப்பமில்லை. அரசியல் ஒரு சாக்கடை, அங்கே பணம் கொடுத்துதான் வாக்குகளைப் பெற்று ஜெயிக்கிறார்கள். ஜாதி இல்லை என்று வெளியில் சொல்வார்களே தவிர, ஜாதி, மதம் எல்லாமே அரசியலுக்குள் இருக்கிறது. அந்த சாக்கடைக்குள் நீ போக வேண்டாம் என்று தடுத்தார்.

அம்மா தடுத்தாங்க: நம் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவர் சூப்பர் ஸ்டார் அவர் எதற்கு இந்த வயதில் அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை. அவரைப் பார்த்தே அரசியலுக்கு வர வேண்டாம் சொல்ல வேண்டும் என சொன்னார் என் அம்மா. நான் எவ்வளவு சமாதானப்படுத்தியும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அம்மாவை மீறி வந்திருந்தால் நான் உருப்பட்டிருக்க மாட்டேன். அதற்குப் பிறகுதான் கொரோனா வந்ததும், தலைவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் அவர் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தார்.

நண்பர் விஜய்: அதன் பின் தான் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது, சூப்பர் ஸ்டார் எனக்கு எவ்வளவு நெருக்கமோ, அதேபோல்தான் நண்பர் விஜய்யும் எனக்கு நெருக்கம். பணம் இருந்தால்தான் அரசியலில் ஜெயிக்க முடியும், பணம் இல்லாமல் ஜெயிக்க முடியாது என்று என் அம்மா அடிக்கடி கூறிக்கொண்டிருந்தார். ஆனால், விஜய் அரசியலுக்கு வந்து மிகப்பெரிய வெற்றி பெற்று, அந்த பிம்பத்தை ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டார். இதையடுத்து, நான் என் அம்மாவிடம் சென்று, கட்சியில் இணையட்டுமா? என்று கேட்டேன். அதற்கு என் அம்மா, தாராளமாகப் போய் சேரு, நீ நினைத்ததை மக்களுக்காகச் செய் என்று பச்சைக் கொடி காட்டிவிட்டார். அதன் பிறகுதான் நான் அரசியலுக்கு வரலாம் என்ற முடிவையே எடுத்தேன். இப்போது நீங்கள் சொல்லுங்கள், நான் அரசியலுக்கு வரட்டுமா வேண்டாமா? இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு உங்களுடைய கருத்துக்களைப் பகிருங்கள் என்று லாரன்ஸ் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications