Raghava Lawrence: "முதலில் K.பாலசந்தர் மட்டும்... இப்போ கார்த்திக் சுப்புராஜ்..” ராகவா லாரன்ஸ் ஓபன் டாக்
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இன்று வெளியானது. ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் காசி தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர்.அதன்பின்னர் பேட்டிக் கொடுத்த ராகவா லாரன்ஸ், கே பாலச்சந்தருக்குப் பின்னர் கார்த்திக் சுப்புராஜ் தான் குரு எனக் கூறியுள்ளார்.

அடுத்த குரு கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இன்று வெளியானது. தீபாவளி ஸ்பெஷலாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா சஜயன், சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கார்த்தியின் ஜப்பான் படத்தை விட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் சிறப்பான சம்பவம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால், இந்தாண்டு தீபாவளி ரேஸில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தான் வின்னர் எனத் தெரிகிறது. இருப்பினும் அடுத்தடுத்த நாட்களில் ஓபனிங் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. இந்நிலையில், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் ஆகியோர், சென்னை காசி தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்து ரசித்தனர்.
படத்தின் பல காட்சிகளை ரசிகர்கள் ஆரவாரத்துடன் பார்த்து ரசித்தது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படம் பார்த்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்ஜே சூர்யா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்க்கு ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அதன்பின் பேசிய ராகவா லாரன்ஸ், தொடர்ச்சியாக பேய் படங்களில் நடித்து வந்த தனக்கு, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் புதிய பாதையை போட்டுக்கொடுத்துள்ளதாகக் கூறினார்.
அதேபோல், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் முழுக்க முழுக்க இயக்குநரின் படமாக வந்துள்ளது. ஒரு படம் இயக்குநரின் விருப்பப்படி உருவானால் தான், அது ஹீரோவுக்கு வெற்றியை கொடுக்கும் என்றார். மேலும், சினிமாவில் இதுவரை எனக்கு இயக்குநர் கே பாலச்சந்தர் தான் குரு. ஆனால், இப்போது கார்த்திக் சுப்புராஜ்ஜும் குரு என நெகிழ்ச்சியாக பேசினார். முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினி தான் தனது குரு என ராகவா லாரன்ஸ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு விழாவில், கே பாலச்சந்தர் சார் தான் தன்னை நடிகனாக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு அவருடன் இணைய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேநேரம், நான் எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினியை தான் தனது குருவாக நினைப்பேன். ஆனால், ரஜினிக்குப் பின்னர் கார்த்திக் சுப்புராஜ் எனக்கு குருவாக தெரிகிறார். அதனால் இனிமேல் கார்த்திக் சுப்புராஜ்ஜையும் குரு என்றே அழைப்பேன் என ராகவா லாரன்ஸ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











