சர்ச்சையை கிளப்பிய கறுப்பர் கூட்டம்.. அவங்கள பெரிய ஆள் ஆக்க வேண்டாம்.. ராகவா லாரன்ஸ் ‘நறுக்’!
சென்னை: கந்த சஷ்டி கவசம் பாடலையும், முருகக் கடவுளையும் கொச்சைப் படுத்தியதாக கறுப்பர் கூட்டம் எனும் யூடியூப் சேனல் மீது பல புகார்கள் கிளம்பின.
தமிழ் கடவுளான முருக பெருமானை வணங்கும் பக்தர்கள் முதல், பிரபலங்கள் வரை பலரும் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிரான தங்களின் கண்டனக் குரலை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ், கந்த சஷ்டி கவசம் சர்ச்சை தொடர்பாக தனது கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்.

கந்த துவேஷம்
கடவுள் மறுப்பு கொள்கைகளை கொண்ட சிலர், கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தனர். அதில், இந்து கடவுள்களையும், ஆன்மிக புராணங்களையும் கொச்சைப் படுத்தும் விதமாக ஏகப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு இருக்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட கந்த சஷ்டி கவசம் வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

அதிரடி கைது
கடந்த சில நாட்களாகவே கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது பலர் தொடர் குற்றச்சாட்டுகளை தொடுத்து வந்த நிலையில், ஏகப்பட்ட புகார்களும் குவிந்தன. இந்நிலையில், அந்த யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு நபரும் சரண் அடைந்துள்ளதாகவும், மீதமுள்ள நபர்களை கைது செய்யவும் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

பிரபலங்கள் கண்டனம்
நடிகர் நட்டி நடராஜ், பிரசன்னா, மனோபாலா, இயக்குநர் கெளரவ் நாராயணன், நடிகைகள் குட்டி பத்மினி, மாலவிகா அவினாஷ், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என பலரும் முருக கடவுளை அவமதித்தவர்களை கடுமையாக கண்டித்து வருகின்றனர். வீடியோ வெளியிட்டும் டிவீட் போட்டும் அவர்களை பலரும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

லாரன்ஸ் அறிக்கை
இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ், இன்று கிருத்திகை, முருகனுக்கு உகந்த நாள்.. சிறு வயது முதலே கந்த சஷ்டி கவசத்தை எங்க அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்துருக்காங்க.. நானும் முருக பக்தன் தான். கந்த சஷ்டி கவசம் இன்னிக்கு வரைக்கும் எனக்கு காவலா இருந்து வருது, கடவுளை பத்தி யார் எதை சொன்னாலும் ஒண்ணும் ஆகாது என தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

பெரிய ஆளா ஆக்காதீங்க
மேலும், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் பெயரையோ, இந்த சர்ச்சை குறித்தோ எந்தவொரு கருத்தும் சொல்லாமல், இந்த பிரச்சனை பேசி, பேசி அவர்களை தேவையில்லாமல் பெரிய ஆள் அக்க வேண்டாம் என்றும், அழகான முருகனின் திரு முகத்தை பாருங்கள், பிரச்சனைகள் காணாமல் போய்விடும். தவறு இழைத்தவர்களுக்கு காலம் தண்டனை கொடுக்கும் என அந்த அறிக்கையில் பதிவிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











