சிறைக்குள் அவதி.. திடீரென துடித்த நடிகை ராகிணி திவேதி.. சிறை மருத்துவமனையில் அவசர சிகிச்சை!
சென்னை: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ராகிணி திவேதிக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக, கன்னட சினிமா துறையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பரப்பனஅக்ரஹாரா
இவர்கள் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் ராகிணியும் சஞ்சனா கல்ராணியும் ஒரே அறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இருவரும் அடிக்கடி மோதிக் கொண்டனர். நடிகை ராகிணி, எப்போதும் சக கைதிகளுடன் பேசிக் கொண்டு இருக்கிறாராம்.

தூங்க முடியவில்லை
இரவில், புத்தகம் படிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. நள்ளிரவு வரை ராகிணி புத்தகம் படிப்பதால், அதே அறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சனாவால் தூங்க முடியவில்லை. இதனால் லைட்டை அணைப்பது தொடர்பாக இருவருக்கும் மோதல் ஏற்படுவதாகத் தகவல்கள் வெளியாகின.

கிரிக்கெட் சூதாட்டம்
இதையடுத்து இவரும் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர். சஞ்சனா கல்ராணி, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண் கைதி ஒருவரின் அறைக்கும் நடிகை ராகிணி திவேதி, கிரிக்கெட் சூதாட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெண் கைதி அறைக்கும் மாற்றப்பட்டனர்.

முதுகுவலியால் அவதி
இந்நிலையில் தான், முதுகுவலியால் அவதிப்படுவதாகவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரி, அவரது சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் சிறை ஆஸ்பத்திரியிலேயே அவர் சிகிச்சை பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சிறை மருத்துவமனை
நடிகை ராகிணி சில நாட்களுக்கு முன், சிறையில் முதுகுவலியால் அவதிப்பட்டார். வலி அதிகமாக இருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும்படியும் சிறை அதிகாரிகளிடம் ராகிணி கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, சிறையில் உள்ள மருத்துவமனையில் ராகிணி அனுமதிக்கப்பட்டார்.

ஜாமீன் மனு தள்ளுபடி
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ராகிணியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மீதான விசாரணை 19- ஆம் தேதி நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications











