தீவிரமடையும் போதைப் பொருள் விவகாரம்.. பிரபல நடிகை வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி ரைடு!
பெங்களூரு: போதைப் பொருள் விவகாரத்தில் பிரபல நடிகையின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி ரைடு நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த டிவி நடிகை அனிகா, கேரளாவைச் சேர்ந்த ரவீந்திரன், அனூப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஏராளமான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்திரஜித் லங்கேஷ்
கைதான டிவி நடிகை அனிகாவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருப்பதும் திரையுலகினர் நடத்தும் பார்ட்டிகளின் போது அனிகா போதை மாத்திரைகளை விற்று வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில், கன்னட சினிமாவில் நடக்கும் பார்ட்டிகளின் போது போதைப் பொருட்கள் பயன்பாடு இருப்பதாக கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.

நடிகர், நடிகைகள்
இளம் நடிகர், நடிகைகள் அதைப் பயன்படுத்துவதாகக் கூறிய அவர் அதைப் பயன்படுத்தும் 15 நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலை போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் ரவிசங்கர் என்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். இவர் ஜெயநகர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரிடம் நடத்திய விசாரணையில் நடிகை ராகிணியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்தது.

ராகிணி திவிவேதி
இதையடுத்து இந்த வழக்கில், நேற்று ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ராகிணி திவிவேதிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் ஆஜராகவில்லை. 'விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. எனது வழக்கறிஞர் போலீசாரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். திங்கட்கிழமை ஆஜராவேன்' என்று ராகிணி சமூக வலைதளத்தில் கூறி இருந்தார்.

ஆஜராக வேண்டும்
மற்றொரு பதிவில், 'போதைப்பொருள் விவகாரத்தில் போலீசார் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பேன். நான் தலைமறைவாகவில்லை. எனக்கும் போதைப்பொருள் விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை' என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் இன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
Recommended Video

அதிரடி சோதனை
இந்நிலையில் அவர் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பெண் இன்ஸ்பெக்டர் தலைமையிலான 7 பேர் கொண்ட போலீசார், இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையின் போது நடிகை ராகிணி வீட்டில்தான் இருக்கிறார். கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ள ராகிணி, தமிழில் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











