நிறைய விஷயம் இருக்கு.. இப்ப எதுவும் சொல்லமாட்டேன்.. போதை வழக்கில் கைதான நடிகை ராகிணி தகவல்
பெங்களூரு: சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும் இப்போது எதையும் சொல்ல மாட்டேன் என்று நடிகை ஜாமீனில் வந்துள்ள நடிகை ராகிணி திவேதி கூறியுள்ளார்.
கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதை விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, சிலர் கைது செய்யப்பட்டனர்.

சஞ்சனா கல்ராணி
இந்த வழக்கில் கன்னட நடிகை ராகிணி திவேதி செப்டம்பர் 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவரை அடுத்து, நடிகை சஞ்சனா கல்ராணி செப்டம்பர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர்கள் நண்பர்கள் உட்பட 14 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மருத்துவக் காரணம்
இந்நிலையில், நடிகைகள் 2 பேரும் ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இரண்டு பேரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் மருத்துவக் காரணங்களுக்காக, நடிகை சஞ்சனாவுக்கு கர்நாடக ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

பேசாமல் இருந்தார்
இதையடுத்து சமீபத்தில் நடிகை ராகிணிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து 150 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து சில நாட்களுக்கு முன் அவர் வெளியே வந்தார். வீட்டில் ஓய்வு எடுத்துவந்த அவர், மீடியாவிடம் எதுவும் பேசாமல் இருந்தார்.

நன்மையால் வெல்வேன்
இந்நிலையில், செய்தியாளர்களிடம் நேற்று பேசிய ராகிணி கூறியதாவது: சாதாரண குடிமகன்களைப் போலவே எனது உரிமைகளும் இந்திய அரசியலைப்பு சட்டத்தின்படி பாதுக்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். கடவுளின் அருளால் தீமையை நன்மையால் வெல்வேன். எனக்கு பலமாக இருப்பது என் குடும்பம், ரசிகர்கள், அதரவாளர்கள்தான்.

நம்பிக்கை அதிகரிப்பு
அனைத்து முயற்சிகளிலும் வெற்ற பெற அவர்கள் ஆதரவு உறுதுணையாக இருக்கும். நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 12 வருடமாக இந்த சினிமாதுறையில் நான் இருக்கிறேன். இதில் உள்ளவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும். நான் இப்போது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன்.

நிறைய விஷயங்கள்
இப்போது எதையும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், நான் வெளியில் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. இப்போது வழக்கு நடந்து கொண்டிருப்பதால், அதைப் பற்றி சொல்ல முடியாது. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி அனைத்து விஷயங்களையும் விவாதிப்பேன். இப்போது எதுவும் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











