சொந்தமாக போட் ஹவுல் வாங்கிய ஆல்யா மானசா.. சொத்து விஷயத்தை வெளியில் சொல்லாதீங்கப்பா? கண்ணுப்பட போகுது!
சென்னை:சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடியாக வலம் வருகின்றனர் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். அண்மையில் இவர்கள் சென்னையில் பிரம்மாண்டமான வீடு கட்டி குடியேறிய நிலையில், தற்போது இவர் சொந்தமாக ஒரு சொகுசு போட் ஹவுசை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் அறிமுகமான நடிகை ஆல்யா மானசா. இந்த சீரியலில் வீட்டு வேலைக்கார பெண்ணாக செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.அதில் தன்னுடன் ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சீரியலில் தொடர்ந்து நடித்த மானசா, ராஜா ராணி சீசன் 2ல் நடித்துக்கொண்டு இருந்த போது இரண்டாம் முறை கர்ப்பமானார். இதைத்தொடர்ந்து அந்த சீரியலில் இருந்து விட்டு விலகினார்.

நடிகை ஆலியா மானசா:அதன் பின் மீண்டும் விஜய் டிவி பக்கம் செல்லாத ஆல்யா மானசா, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே போல, சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல்' தொடரில் நடித்து வருகிறார். இந்த இரண்டு சீரியலும் மக்களுக்கு பிடித்த சீரியலாக உள்ளது. அண்மையில் இவர் சென்னையில் கனவு இல்லத்தை கட்டி அதில், குடியேறினார்கள். ஒரு சிறிய வீட்டில் ஆல்யா, சஞ்சீவ், அவரது தாய், தம்பி குழந்தைகள் என அனைவரும் வசித்து வந்தனர். ஆனால், இப்போது, மிகவும் பிரம்மாண்டமாக ஆசை ஆசையாக வீட்டை கட்டி அதில் குடியேறி உள்ளனர். அந்த கிரகபிரவேசத்திற்கு சின்னத்திரை நண்பர்கள் அனைவரையும் அழைத்து அமர்க்களப்படுத்தி விட்டார்.

2 கோடியில் போட் ஹவுஸ்: இந்நிலையில், ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதியினர், கேரளா மாநிலம் ஆலப்புழாவில் போட் ஹவுஸை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த போட் ஹவுஸின் விலை ரூ.2 கோடி என்றும் அதில் அனைத்துவிதமான வசதிகளும் உண்டு என்று கூறப்படுகிறது. விடுமுறையை கழிக்க பெரும்பாலானோர் போட் ஹவுசையே பெரிதும் விரும்புவதால், ஆல்யா இந்த தொழிலை தேர்வு செய்துள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சில இணையவாசிகள், சொத்து விஷயத்தை வெளியில் சொல்லாதீங்கப்பா? கண்ணுப்பட போகுது என்று கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஆலியாவின் சம்பளம்: "இனியா" தொடரில் நடித்து வரும் ஆலியா மானசாவிற்கு ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சுமார் 20,000 முதல் 25,000 வரை சம்பளமாக தரப்பட்டு வந்தாகவும். ஆனால், தற்பொழுது ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சுமார் 50,000 முதல் 60,000 வரை அவர் சம்பளம் வாங்குவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அண்மையில் பேட்டி அளித்திருந்த ஆலியா மானசா, புதியவீடு, சுமார் 1.8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளதாகவும், அதை முழுக்க முழுக்க லோனில் தான் கட்டியுள்ளதாகவும் மானசா பேசி இருந்தார். இப்படி இருக்கும் போது ஆலியா எப்படி சொகுசு போட் ஹவுஸ் வாங்கி இருப்பார் என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











