தினமும் மனைவியின் காலை பிடித்துவிடும் ராஜமௌலி.. இவருக்குள் இப்படி ஒரு முகமா?
சென்னை: ராஜமௌலி இயக்கத்தில் கடைசியாக ஆர்.ஆர்.ஆர் படம் வெளியானது. அதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட்டானது. இந்த சூழலில் அவர் அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவிருக்கிறார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடந்துவரும் சூழலில் ராஜமௌலி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை உச்சக்கட்ட ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவர் ராஜமௌலி. நான் ஈ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அவர் பாகுபலியை இயக்கியதன் மூலம் வெகு பிரபலமாகிவிட்டார். இதன் காரணமாக அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என நடிகர்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர். இவர் கடைசியாக ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி: சரித்திர கால கதை வருவது இப்போது பெருகியிருக்கிறது. ஆனால் அதை எப்படி உருவாக்கி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதில் முதல் விதை போட்டவர் ராஜமௌலி. பொன்னியின் செல்வன் படத்தின் புரோமோஷன்போது பேசியிருந்த மணிரத்னம் பாகுபலி வரவில்லை என்றால் பொன்னியின் செல்வனை என்னால் எடுத்திருக்க முடியுமா என தெரியாது என ராஜமௌலியை புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வசூலை அள்ளிய பாகுபலி: பாகுபலி படத்தின் முதல் பாகம் பிரமாண்ட வெற்றி பெற்றது 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அதேபோல் அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. ஒவ்வொரு காட்சியையும் படு பிரமாண்டமாக படமாக்கியிருந்தார் ராஜமௌலி. இதன் காரணமாக படத்தின் நாயகன் பிரபாஸ் இப்போது ஒரு பான் இந்தியா ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி தென்னிந்தியாவின் படங்கள் பாலிவுட்டிலும் வசூலை அள்ளலாம் என நிரூபித்த படமும் பாகுபலிதான்.
ஆர்.ஆர்.ஆர்: அதேபோல் கடைசியாக இவர் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கினார். இந்தப் படம் மொத்தம் 1000 கோடி ரூபாயை வசூலித்தது. அதுமட்டுமின்றி ஆஸ்கர் ரேஸில் கலந்துகொண்டு, நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருதையும், கோல்டன் குளோப் விருதையும் வென்றது. இதனால் ராஜமௌலி உலக புகழ் பெற்ற இயக்குநராக மாறியிருக்கிறார். அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அது அநேகமாக மகாபாரதத்தை தழுவி எடுக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
ராஜமௌலி செய்யும் விஷயம்: இந்நிலையில் ராஜமௌலி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ராஜமௌலி ஷூட்டிங் முடித்து வீடு திரும்பியதும் அவரது கால்களை ரமா பிடித்துவிடுவாராம். அதேபோல் ஷூட்டிங் இல்லாமல் ராஜமௌலி வீட்டில் இருந்தால் அவர் ரமாவின் கால்களை இரவில் பிடித்துவிடுவாராம். அதுமட்டுமின்றி பாத்திரங்கள் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது என்று பல வேலைகளை செய்து மனைவிக்கு மிகப்பெரிய உதவியாக இருப்பாராம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அட பிரமாண்ட இயக்குநருக்குள் இப்படி ஒரு குணமா என்று ஆச்சரியப்பட்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











