பாகுபலியின் இதயம் ராஜமௌலி என்றால்... பாகுபலியின் ரத்தம் ரசிகர்கள் தான் - பிரபாஸ்
ஹைதராபாத்: படங்களின் வெற்றிக்கு எந்த ஒரு தனிப்பட்ட நடிகரும் காரணமாக முடியாது.ஒட்டுமொத்த குழுவினரின் உழைப்பும், படத்தின் கதையுமே வெற்றியைத் தீர்மானிக்கிறது என்று நடிகர் பிரபாஸ் கூறியிருக்கிறார்.
பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பாகுபலி 2 மற்றும் தனது திரைவாழ்க்கை குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் கூறும்போது "படத்தின் வெற்றிக்கு எந்த ஒரு தனிப்பட்ட நடிகரும் காரணமாக முடியாது, படத்தின் இயக்குநர் தொடங்கி ஒட்டுமொத்த குழுவினருக்கும் அந்த வெற்றியில் பங்குண்டு.
பாகுபலி படத்தை எடுத்துக் கொண்டால் பாகுபலியின் மூளை மற்றும் இதயம் என்று ராஜமௌலியை குறிப்பிடலாம். தயாரிப்பாளர்கள் பாகுபலி எழுந்து நிற்க எலும்பாக மாறினர்.
ரசிகர்கள் பாகுபலியின் ரத்தமாக மாறி படத்தை ஓட வைத்தனர் இது போன்று ஒரு கூட்டு முயற்சியே படத்தின் மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.
இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் திரைக்கு வருவதே பெரும்பாடாக இருக்கிறது, இந்த மாதிரியான சூழலில் படக்குழுவினரின் கூட்டு முயற்சியே படத்தின் வெற்றிக்கு துணை நிற்கிறது" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்கவிருக்கிறது, இந்தப் படத்திற்காக மீண்டும் உடற்பயிற்சி செய்து தனது தோற்றத்தை கட்டுக்கோப்பாக மாற்றவிருக்கிறார் நாயகன் பிரபாஸ்.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 600 கோடியை வசூலித்த இந்தத் திரைப்படம் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் 100 நாட்களைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











