திருப்பதியில் “மங்களகரமாக” வெளியாகும் பாகுபலி பாடல்கள்!
ஹைதராபாத்: தெனாலி படத்தில் நடிகர் கமல் சொல்வாரே பயம் பயம் நின்றாலும் பயம் அமர்ந்தாலும் பயம் எங்கு திரும்பினாலும் பயம் என்று, அதைப்போன்று தற்போது இந்திய சினிமா முழுதும் பாகுபலி, பாகுபலி என்றே முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றது.
யாராவது தும்மினால் கூட நேற்று பாகுபலி படப்பிடிப்பில் இவர் தும்மினார் என்று கொட்டை எழுத்தில் செய்தி போடக் கூடிய அளவிற்கு நாளுக்கு நாள் பாகுபலியின் மீதுள்ள மோகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

பாகுபலியின் சமீப செய்தி படத்தின் பாடல்களை திருப்பதியில் மங்களகரமாக வெளியிட முடிவு செய்து இருக்கின்றனர் படக் குழுவினர். கடந்த மே மாதம் வெளியிட வேண்டிய பாடல்கள் இன்னும் வெளியாகாமல் தள்ளிக் கொண்டே செல்கிறது. ஆனால் இந்த முறை கண்டிப்பாக படத்தின் பாடல் வெளியீடு திருப்பதியில் நடைபெறும் என்று படத்தின் தயாரிப்புத் தரப்பில் இருந்து செய்தி வந்திருக்கிறது.
வரும் 13 ம் தேதி ஏழுமலையானுக்கு உகந்த தினமான சனிக் கிழமையன்று பாடல்களை திருப்பதியில் வெளியிடப் போகிறாராம் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. எம்.எம்.கீரவாணியின் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











