அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போனது ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர்.. எல்லாம் இந்த காரணத்திற்காகவா?
சென்னை: பாகுபலி இயக்குநர் ராஜமெளலியின் பிரம்மாண்ட படைப்பான ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போனது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் இந்த படத்தின் ரிலீஸ் முன்னதாக ஜூலை 30 என அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதமே 70 சதவீத ஷூட்டிங் நிறைவு பெற்றது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அடுத்த ஆண்டுக்கு படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

ராஜமெளலியின் பிரம்மாண்டம்
டோலிவுட் இயக்குநரான ராஜமெளலி படங்கள் என்றாலே அதில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. மகதீரா, நான் ஈ, பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் என அனைத்தும் பிரம்மாண்ட படைப்புகளாக வெளிவருகின்றன. அடுத்ததாக அவர் இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படமும் 250 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.

யார் யார்
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இந்திய திரையுலகம் மட்டும் இன்றி ஹாலிவுட் நடிகர்களும் நடித்து வருகின்றனர். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி, ஒலிவியா மோரிஸ், ரே ஸ்டீவன்சன் மற்றும் ஆலிசன் டூடி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

ஆலியா பட்
பான் இந்திய படமாக ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்க முடிவு செய்த ராஜமெளலி ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியா பட்டை ஒப்பந்தம் செய்துள்ளார். பாலிவுட்டின் பிரம்மாண்ட படங்களில் தற்போது நடித்து வரும் ஆலியா பட், பாகுபலியின் வெற்றியை பார்த்து இந்த படத்திற்கு உடனடியாக ஓகே சொல்லி உள்ளார்.

எப்போ ரிலீஸ்
ஜூலை 30ம் தேதி ஆர்.ஆர்.ஆர் படம் ரிலீசாகாது என்றும், அக்டோபருக்கு ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது என்றும் சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகி வைரலானது. ஆனால், ராஜமெளலி மற்றும் ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினர் அந்த செய்தி குறித்து எந்தவொரு தகவலும் வெளியிட வில்லை. இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கு ஆர்.ஆர்.ஆர். ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.
2021
2020ம் ஆண்டின் பிரம்மாண்ட படமாக ஆர்.ஆர்.ஆர் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு பேரிடியாகத் தான் இருக்கும். ஆர்.ஆர்.ஆர் படக்குழுவிடம் இருந்து தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக ஆர்.ஆர்.ஆர் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரணம் இதுவா?
இந்த ஆண்டு சங்கராந்தி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் வெளியான பல படங்கள் பத்து நாள் வசூலை வாரி குவித்தன. இதனை மனதில் கொண்டு அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி ஆர்.ஆர்.ஆர் படத்தை இறக்கினால், ஆயிரம் கோடி வசூலை தாராளமாக ஈட்டலாம் என ராஜமெளலி கணக்கு போட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

டோலிவுட் படங்கள்
இந்த ஆண்டு சங்கராந்தி பண்டிகையை டார்கெட் செய்து வெளியான மகேஷ் பாபுவின் சரிலேரு நீக்கெவரு மற்றும் அல்லு அர்ஜுனி அலா வைகுந்த புரமுலோ படங்கள் தலா 200 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியதால், இந்த அதிரடி முடிவை ராஜமெளலி சிந்தித்து எடுத்துள்ளார் என்றும், தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சிஜி பிரச்சனை
மேலும், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படத்திற்கு வந்தது போல, ஆர்.ஆர்.ஆர் படத்திற்கும் சிஜி பிரச்சனை எழுந்துள்ளதாகவும், அதுதான் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதற்கான உண்மையான காரணம் எனவும் சொல்லப்படுகின்றன. ரிலீஸ் தேதி தள்ளிப் போனாலும், ரிலீசாகும் போது ராஜமெளலி தரமான சம்பவம் செய்வார் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications











