கொரோனாவுக்குப் பிறகு.. அடுத்தப் பட ஷூட்டிங் கேன்சல்.. சில மாதங்கள் ஓய்வெடுக்க பிரபல நடிகர் முடிவு!
சென்னை: கொரோனா பாதிப்புக்குப் பின் வீட்டுக்கு திரும்பியுள்ள டாக்டர் ராஜசேகர், மேலும் சில மாதங்கள் ஓய்வெடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகர் டாக்டர் ராஜசேகர், ஜீவிதா ஆகியோருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
அவர்கள் மகள்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதனால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.

உறுதிப்படுத்தி இருந்தார்
மகள்கள் ஷிவானி, ஷிவாத்மிகா குணமான நிலையில், டாக்டர் ராஜசேகரும் ஜீவிதாவும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை டாக்டர் ராஜசேகர், ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருந்தார். பின்னர் நடிகை ஜீவிதா குணமானதை அடுத்து வீட்டுக்குத் திரும்பினார்.

மோசமான நிலையில்
டாக்டர் ராஜசேகரின் உடல்நிலை பற்றி வதந்தி பரவியது. இதனால் நடிகை ஜீவிதா, ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 'ராஜசேகர் நலமாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் மோசமான நிலையில் இருந்தார். இப்போது அவரால் நன்றாக சுவாசிக்க முடிகிறது. அவர் விரைவில் வீட்டுக்குத் திரும்புவார் என்று கூறியிருந்தார்.

ஜோசப் ரீமேக்
பின்னர் சுமார் மூன்று வார சிகிச்சைக்குப் பின் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் கடந்த அக்டோபர் மாதம் தனது அடுத்தப் படத்தை ஆரம்பிக்க இருந்தார். இது மலையாளத்தில் ஹிட்டான 'ஜோசப்' படத்தின் ரீமேக். அதற்குள்தான் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

சில மாதங்கள்
டாக்டர் ராஜசேகர் உடல் நிலையில் இன்னும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால், ஜோசப் படத்தின் ரீமேக் ஷூட்டிங்கை மேலும் சில மாதங்கள் தள்ளி வைத்துவிட்டு அவர் சில மாதங்கள் ஓய்வெடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜோசப் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் பாலா தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications











