ரஜினி 173.. இயக்கப்போவது கமலின் ஆஸ்தான இயக்குநரா?.. ரேஸில் முந்துவது யார்?.. இப்படி குழப்புறாங்களே?
சென்னை: கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இப்படத்திலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்துவிட்டார் சுந்தர். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் விலகியதை அடுத்து ரஜினியை இயக்கப்போவது இவர்தான் என வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோரின் பெயர்ளும் அடிபட்ட சூழலில் தற்போது புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த்தை வைத்து கமல்ஹாசன் படம் தயாரிக்கவிருக்கிறார் என்றும் அதனை சுந்தர்.சி இயக்கவிருக்கிறார் என்றும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. பல வருடங்கள் கழித்து ரஜினியும், சுந்தர்.சியும் இணையப்போவதால் நிச்சயம் ஃபேமிலி ஆடியன்ஸை கவர் செய்யும்படிதான் இந்தப் படம் அமையும் என்று கருதப்பட்டது. சுந்தரும் தனது டீமோடு படத்தின் முதற்கட்ட வேலைகளை ஆர்வமாக தொடங்கியிருந்தார்.
சுந்தர்.சி விலகல்: ஆனால் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக இந்தப் படத்திலிருந்து அவர் விலகிவிட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "தலைவர் 173 படத்திலிருந்து எதிர்பார்க்காத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் கனத்த இதயத்துடன் விலகுகிறேன். ரஜினிகாந்த் நடிக்க, கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகவிருந்த இப்படத்தில் இணைவது எனக்கு பெரிய ஒரு கனவு நனவாகும் வாய்ப்பாக இருந்தது.

அனைவருக்கும் நன்றி: வாழ்க்கையில் சில சமயங்களில் நமது கனவுகளிலிருந்து விலகி சென்றாலும் நமக்காக வகுக்கப்பட்ட பாதையை பின்பற்றுவதற்கு வேண்டிய தருணங்கள் வரும். இந்த இரண்டு ஜாம்பவான்களுடனான எனது தொடர்பு நீண்ட காலத்துக்கு முன்பே தொடங்கியது. இந்த வாய்ப்பை நான் தவறவிட்டாலும் தொடர்ந்து அவர்களது ஆலோசனையை நான் நடுவேன். இந்த மாபெரும் படைப்புக்காக என்னை கருத்தில் கொண்டதற்கு இரண்டு பேருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த இயக்குநர்: சுந்தர்.சி விலகியதைத் தொடர்ந்து அடுத்ததாக இந்தப் படத்தை யார் இயக்குவார் என்ற கேள்விகள் எழ தொடங்கின. முதலில் லோகேஷ் கனகராஜ் பெயர் அடிபட்டது. ஆனால் கூலி கொடுத்த ரிசல்ட்டால் அவரை ரஜினி - கமல் இரண்டு பேருமே ஒதுக்கிவிட்டார்கள் என்று சொல்லப்பட்டது. அவரைத் தவிர்த்து இயக்குநர்கள் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபட்டன.
இவருக்குத்தான் வாய்ப்புகள் அதிகம்: ஆனால் அவர்கள் இந்தப் படத்தை இயக்குவதைவிடவும் இன்னொருவர் இயக்குவதற்கே வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. அதாவது கமலிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவரும், தூங்காவனம் படத்தை இயக்கியவருமான ராஜேஷ் எம்.செல்வாதான் அவர். கமலுடன் அவருக்கு நல்ல புரிதல் இருப்பதால் அவரையே இயக்குநராக ஃபிக்ஸ் செய்ய கமல் முடிவு செய்திருப்பதாகவும்; ரஜினியிடம் சொல்வதற்காக கதை ஒன்றை தயார் செய்யும்படியும் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.
ஒருவேளை ராஜேஷின் கதையைவிடவும் கமலே ஒரு கதை எழுதி அதை ராஜேஷை வைத்து இயக்கினாலும் இயக்கலாம் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் ரஜினியை வைத்து இயக்கும் அளவுக்கு ராஜேஷுக்கு அனுபவம் இருக்கிறதா அப்படி இயக்கினால் வெற்றி படமாக மாறுமா என்ற சந்தேகத்தையும் திரைத்துறையினர் கிளப்பியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











